பாடல் 370 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - ......
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
துகிலு ம்ருகமத பரிமள அளகமு நெகிழ இருதன கிரியசை தரஇடை துவள மனிதரு மமரரு முநிவரு ...... முடனோடித் தொடர வனமணி மகரமி லகுகுழை யடரு வனவிட மிளிர்வன ரதிபதி சுருதி மொழிவன கயல்விழி புரள்தர ...... நடுவாக வகிரு மதிபுரை தநுநுதல் பனிவர வனச பதயுக பரிபுர மொலிபட மறுகு தொறுமுல வியினிய கலவியை ...... விலைகூறும் வரைவி லரிவையர் தருசுக சலதியி லலையு மெனதுயி ரநுதின நெறிதரு மவுன சிவசுக சலதியில் முழுகுவ ...... தொருநாளே முகிலு மதியமும் ரவியெழு புரவியு நெடிய குலைமிட றிடறமு துககன முகடு கிழிபட வளர்வன கமுகின ...... மிசைவாளை முடுகு கயலுகள் வயல்களு முருகவிழ் தடமு முளரிய அகழியு மதிள்களு முழுது முடையதொ ரருணையி லுறைதரு ...... மிளையோனே அகிலு மருதமு முகுளித வகுளமு மமுத கதலியும் அருணமும் வருடையு மபரி மிதமத கரிகளு மரிகளு ...... முடனேகொண் டருவி யிழிதரு மருவரை தனிலொரு சவர வனிதையை முநிதரு புனிதையை அவச முடன்மல ரடிதொழு துருகிய ...... பெருமாளே. |
ஆடையும், கஸ்தூரி ஆகிய நறு மணம் கமழும் கூந்தலும் நெகிழ்ந்து குலையவும், இரண்டு மலை போன்ற மார்பகங்கள் அசையவும், இடுப்பு துவளவும், மனிதரும், தேவர்களும், முனிவர்களும் கூடவே ஓடி வந்து தொடரவும், அழகு மணியால் ஆகிய மகர மீன் போல் விளங்கும் குண்டலங்களை தாக்குவனவாய், விஷம் பொலிவனவாய், ரதியின் கணவனான மன்மதனுடைய காம சூத்திரத்தை எடுத்துக் கூறுவனவாய், கயல் மீனை ஒத்த கண்கள் புரளவும், மத்தியில் கீறு பட்ட நிலவை ஒத்த, வில்லைப் போன்ற நெற்றி வியர்வுத் துளிகளைத் துளிக்கவும், தாமரை போன்ற இரண்டு திருவடிகளிலும் சிலம்பு ஒலிக்கவும், தெருக்கள் தோறும் உலாவி புணர்ச்சி இன்பத்தை விலை கூறுகின்ற அளவில்லாத பொது மகளிர் கொடுக்கும் கலவி இன்பக் கடலில் அலைகின்ற என்னுடைய உயிர், நாள் தோறும் நன்னெறியில் செலுத்தும் மெளன சிவ சுகக் கடலில் திளைத்து முழுகும்படியான பாக்கியம் கொண்டதாகிய நாள் ஒன்று வருமோ? மேகமும், நிலவும், சூரியனின் ஏழு குதிரைகளும் தமது நீண்ட குலைகளின் கழுத்து பாகத்தில் இடறுண்ணவும், பழைய ஆகாய உச்சி கிழி படவும், உயர்ந்து வளர்ந்துள்ள கமுகு மரங்கள் கூட்டத்தின் மேல் பாயும் வாளை மீன்களும் (அவைகளால்) விரட்டப்படும் கயல் மீன்களும் ஓடித் திரியும் வயல்களும், நறு மணம் வீசும் குளங்களும் தாமரை மலர்கள் விளங்கும் அகழிகளும், மதில்களும் இவை எல்லாம் உடையதான ஒப்பற்ற திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற இளையவனே, அகில், மருதம், மலர் விடும் மகிழ மரம், அமுதம் போல் இனிக்கும் வாழை மரம் ஆகியவைகளும், செம்மறி ஆடும், மலை ஆடும், கணக்கற்ற மத யானைகளும், குரங்குகளும், உடனே இழுபட்டுவரப் பாயும் அருவிகள் இறங்கி வரும் அருமையான (வள்ளி) மலையில், ஒப்பற்ற வேடுவப் பெண்ணும், சிவ முனிவர் தவத்தே வந்த பரிசுத்தமான நங்கையுமாகிய வள்ளியை தன்வசமிழந்த ஆசையுடன் திருவடிகளைத் தொழுது மனமுருகும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 370 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, நாள், கடலில், பாயும், மீன்களும், ஆடும், மரம், ஒப்பற்ற, தோறும், ஒத்த, மணம், ஆகிய, பெருமாளே, இரண்டு, போல், கயல், விளங்கும், தாமரை