பாடல் 369 - திருவருணை - திருப்புகழ்

ராகம் - ஹம்ஸா
நந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
கருணை சிறிதுமில் பறிதலை நிசிசரர் பிசித அசனம றவரிவர் முதலிய கலக விபரித வெகுபர சமயிகள் ...... பலர்கூடிக் கலக லெனநெறி கெடமுறை முறைமுறை கதறி வதறிய குதறிய கலைகொடு கருத அரியதை விழிபுனல் வரமொழி ...... குழறாவன் புருகி யுனதருள் பரவுகை வரில்விர கொழியி லுலகியல் பிணைவிடி லுரைசெய லுணர்வு கெடிலுயிர் புணரிரு வினையள ...... றதுபோக உதறி லெனதெனு மலமறி லறிவினி லெளிது பெறலென மறைபறை யறைவதொ ருதய மரணமில் பொருளினை யருளுவ ...... தொருநாளே தருண சததள பரிமள பரிபுர சரணி தமனிய தநுதரி திரிபுர தகனி கவுரிப வதிபக வதிபயி ...... ரவிசூலி சடில தரியநு பவையுமை திரிபுரை சகல புவனமு முதவிய பதிவ்ருதை சமய முதல்வித னயபகி ரதிசுத ...... சதகோடி அருண ரவியினு மழகிய ப்ரபைவிடு கருணை வருணித தனுபர குருபர அருணை நகருறை சரவண குரவணி ...... புயவேளே அடவி சரர்குல மரகத வனிதையு மமரர் குமரியு மனவர தமுமரு கழகு பெறநிலை பெறவர மருளிய ...... பெருமாளே. |
கருணை என்பதே சிறிதும் இல்லாது, தலை மயிர் பறிப்பவரும், அரக்கர்களுக்கு ஒப்பானவரும், புலால் உண்ணும் வேடர்களை ஒத்தவரும் ஆகிய சமணர் முதலிய வெகுவான பர சமய வாதிகள் பலரும் கலகங்கள் செய்தும், விபா£த உணர்ச்சியால் மாறுபட்டும், ஒன்று சேர்ந்து, ஆரவாரம் செய்து நீதி முறை கெட்டு, அவரவர் முறை வரும் போதெல்லாம் பெருங் கூச்சலிட்டுக் கதறி, வாயாடி, திட்டி, பண்பு தவறிப் பேசுகின்ற ஒன்றை, கலை நூல்களால் கருதவும் அரிதான மெய்ப் பொருளை, கண்களில் நீர் வர, பேச்சுக் குழறி, அன்புடன் மனம் உருகி உன் திருவருளைப் போற்றும் மன நிலை வந்தால், தந்திர புத்தி ஒழிந்தால், உலக சம்பந்தமான கட்டுக்கள் விட்டால், மனம், வாக்கு, காயம் இம் மூன்றின் தொழிலும் அழிந்தால், உயிரைச் சார்ந்து ஆட்டுவிக்கும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி உதறி விலக்கினால், எனது என்னும் ஆசையாகிய குற்றம் அற்றுப் போனால், அறிவில் எளிதாகப் பெறுதல் முடியும் என்று வேதங்கள் பறையறைந்து சொல்லுவதான அதனை, ஒப்பற்ற, தோற்றமும் முடிவும் இல்லாத பொருளை அடியேனுக்கு நீ அருள் செய்யும் ஒரு நாள் கிட்டுமா? என்றும் இளமையோடு கூடியதாய், தாமரை போன்றதாய், நறு மணம் வீசுவதாய், சிலம்பு அணிந்ததாயுள்ள திருவடிகளை உடையவள், பொன் மயமான மேருவை வில்லாக ஏந்தியவள், திரி புரத்தை எரித்தவள், கெளரி, பார்வதி, பகவதி, பயிரவி, சூலத்தைக் கையில் ஏந்தியவள், சடை தரித்தவள், போகங்களை நுகர்பவள், உமா தேவி, திரிபுரை, எல்லா உலகங்களையும் ஈன்றருளிய பதிவிரதை, எல்லா சமயங்களுக்கும் தலைவியும் ஆன பார்வதியின் மகனே, பாகீரதியின் (கங்கையின்) மகனே, நூறு கோடி சிவந்த சூரியர்களை விட அழகான ஒளியை வீசும் கருணையே, அலங்கார உருவான உடலை உடையவனே, குருபரனே, திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் சரவணனே, குரா மலரை அணிந்த புயங்களை உடைய தலைவனே, காட்டில் சஞ்சரிக்கும் வேடர் குலத்து, பச்சை நிறம் உள்ள பெண்ணான வள்ளியும், தேவர் குமரியான தேவயானையும் எப்போதும் இரு பக்கத்திலும் அழகு விளங்க நிலை பெற்றிருக்க, அவர்களுக்கு வரம் தந்தருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 369 - திருவருணை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தகதிமி, கருணை, நிலை, மனம், எல்லா, மகனே, பொருளை, ஏந்தியவள், பெருமாளே, முதலிய, கதறி, உதறி, திரிபுரை, முறை