பாடல் 363 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - சுத்த
ஸாவேரி; தாளம் - அங்கதாளம் - 6
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தானத் தானத் ...... தனதான தானத் தானத் ...... தனதான |
நாடித் தேடித் ...... தொழுவார்பால் நானத் தாகத் ...... திரிவேனோ மாடக் கூடற் ...... பதிஞான வாழ்வைச் சேரத் ...... தருவாயே பாடற் காதற் ...... புரிவோனே பாலைத் தேனொத் ...... தருள்வோனே ஆடற் றோகைக் ...... கினியோனே ஆனைக் காவிற் ...... பெருமாளே. |
உன்னை விரும்பித் தேடித் தொழும் அடியார்களிடம் நான்விருப்பம் உள்ளவனாகத் திரியமாட்டேனோ? நான்மாடற்கூடல் என்ற மதுரையம்பதியில் உள்ள (துவாதசாந்த நிலையில்* கூடும்) ஞானவாழ்வை அடையும்படி அருள் புரிவாயாக. தமிழிசையில் பாடினால் ஆசையோடு கேட்பவனே, பாலையும் தேனையும் போல் இனிமையாக அருள்பவனே, நடனமாடும் மயிலுக்கு இன்பம் அளிப்பவனே, திருவானைக்கா தலத்தின் பெருமாளே.
* மதுரை ஜீவன்முக்தி தலம் மட்டுமின்றி துவாதசாந்தத் தலமுமாய் உள்ளது.துவாதசாந்தம் என்பது சிரசின் உச்சிக்கு மேல் பன்னிரண்டு அங்குலத்தில் இருக்கும் யோக ஸ்தானம்.இந்த ஞானம் மதுரையில் கிடைத்தற்கு உரியது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 363 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், பெருமாளே, தேடித், தனதான, தகிட