பாடல் 361 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .....
தானத் தான தான தனதன தானத் தான தான தனதன தானத் தான தான தனதன ...... தனதான |
காவிப் பூவை யேவை யிகல்கவன நீலத் தால கால நிகர்வன காதிப் போக மோக மருள்வன ...... இருதோடார் காதிற் காதி மோதி யுழல்கண மாயத் தார்கள் தேக பரிசன காமக் ரோத லோப மதமிவை ...... சிதையாத பாவிக் காயு வாயு வலம்வர லாலிப் பார்கள் போத கருமவு பாயத் தான ஞான நெறிதனை ...... யினிமேலன் பாலெக் காக யோக ஜெபதப நேசித் தார வார பரிபுர பாதத் தாளு மாறு திருவுள ...... நினையாதோ கூவிக் கோழி வாழி யெனமயி லாலித் தால கால மெனவுயர் கூளிச் சேனை வான மிசைதனில் ...... விளையாடக் கோரத் தீர சூர னுடைவினை பாறச் சீற லேன பதிதனை கோலக் கால மாக அமர்செய்த ...... வடிவேலா ஆவிச் சேல்கள் பூக மடலிள பாளைத் தாறு கூறு படவுய ராலைச் சோலை மேலை வயலியி ...... லுறைவோனே ஆசைத் தோகை மார்க ளிசையுட னாடிப் பாடி நாடி வருதிரு ஆனைக் காவில் மேவி யருளிய ...... பெருமாளே. |
கருங்குவளைப் பூவுடனும், அம்புடனும் ஒத்திருந்தும் மாறுபடுவன. கருநீல ஆலகால விஷத்தை ஒப்பன. கொல்லும் தன்மையதாய் இன்பத்தையும் காம மயக்கத்தையும் கொடுப்பன. இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவன போலப் போய் மோதித் திரியும் கண்களைக் கொண்டு, மாயக்காரிகள் (ஆகிய வேசையர்களின்) தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, கோபம், ஈயாமை, செருக்கு இவை அழியாத பாவியாகிய எனக்கு, ஆயுளும், பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்தவர்களுடைய அறிவோடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞான வழியை, இனி மேல் என் மீது அன்பு வைத்து, (அந்த வழியே) குறியாக வைத்துக் கொண்டு, ஜெப தபம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, பேரொலி செய்யும் சிலம்பு அணிந்த உன் திருவடியில் என்னை ஆண்டு கொண்டு ஆளுமாறு நினைந்து அருளக் கூடாதோ? கோழியானது கூவி வாழிய என்று வாழ்த்தி, மயில் ஆரவாரம் செய்து விஷம் போல உயர்ந்து விளங்க, சிவ கணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் விளையாட, அச்சம் தருபவனும் தீரனுமான சூரனுடைய முயற்சி சிந்தி அழிய, சீறிப் பெருங் கோபத்துடன் வந்த ஆதிவராகத்தை* கூச்சலிட்டு அடங்க போர் செய்த கூரிய வேலனே, குளத்தில் உள்ள சேல் மீன்கள் கமுக மரத்தின் ஏடுகளாகிய இளம் பாளைகளின் குலைகள் பிளவுபடும்படி, உயர்ந்து பாயும் கரும்புகள் நிறைந்த சோலையைக் கொண்ட, மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே, ஆசை நிரம்பிய பெண்கள் இசைபாடிக் கொண்டு விரும்பி வந்து வணங்குகின்ற திருவானைக்கா என்னும் ஊரில் விருப்புடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* ஏனபதி = ஆதிவராகம். இரணியாக்ஷன் என்பவன் பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலின் கீழ் ஒளித்தான். பூமி தேவி முறையிட, திருமால் வராக ரூபம் எடுத்து, இரணியாக்ஷனைக் கொன்று பூமியை நிலை நிறுத்தினார். அரக்கன் ரத்தத்தைக் குடித்த வராகம் மதம் கொள்ள, சிவபெருமான் முருகனை அனுப்பினார். போரில் வராகத்தை முருகன் அடக்கி அதன் கொம்பைப் பிடுங்கிச் சிவனிடம் சேர்ப்பித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 361 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்டு, அன்பு, தனதன, தானத், என்னும், உயர்ந்து, செய்து, மேலை, பெருமாளே