பாடல் 359 - திருவானைக்கா - திருப்புகழ்

ராகம் -
ஹம்ஸாநந்தி; தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2
தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன தான தனன தனதந்த தந்தன ...... தனதான |
ஓல மறைக ளறைகின்ற வொன்றது மேலை வெளியி லொளிரும் பரஞ்சுடர் ஓது சரியை க்ரியையும் புணர்ந்தவ ...... ரெவராலும் ஓத வரிய துரியங் கடந்தது போத அருவ சுருபம் ப்ரபஞ்சமும் ஊனு முயிரு முழுதுங் கலந்தது ...... சிவஞானம் சால வுடைய தவர்கண்டு கொண்டது மூல நிறைவு குறைவின்றி நின்றது சாதி குலமு மிலதன்றி யன்பர்சொ ...... னவியோமஞ் சாரு மநுப வரமைந்த மைந்தமெய் வீடு பரம சுகசிந்து இந்த்ரிய தாப சபல மறவந்து நின்கழல் ...... பெறுவேனோ வால குமர குககந்த குன்றெறி வேல மயில எனவந்து கும்பிடு வான விபுதர் பதியிந்த்ரன் வெந்துயர் ...... களைவோனே வாச களப வரதுங்க மங்கல வீர கடக புயசிங்க சுந்தர வாகை புனையும் ரணரங்க புங்கவ ...... வயலூரா ஞால முதல்வி யிமயம் பயந்தமின் நீலி கவுரி பரைமங்கை குண்டலி நாளு மினிய கனியெங்க ளம்பிகை ...... த்ரிபுராயி நாத வடிவி யகிலம் பரந்தவ ளாலி னுதர முளபைங் கரும்புவெ ணாவ லரசு மனைவஞ்சி தந்தருள் ...... பெருமாளே. |
ஓம் என்று ஒலிக்கும் வேதங்களால் பேசப்பெறும் ஒப்பற்ற ஒன்று அது. பிரம்மாந்தரத்திற்கும் அப்பாலுள்ள மேலைப் பெருவெளியில் ஒளிர்கின்ற அருட்பெருஞ் ஜோதி அது. நூல்களில் சொல்லப்படும் சரியை, கிரியை, யோகம்* என்ற மூன்று வழிகளை அநுசரித்தவர்களாலும் சொல்லுதற்கு அரியதாகிய துரிய நிலையைக் கடந்தது அது. உணர்வு மயமாகிய அருவம், உருவம் என்ற இரண்டு நிலையிலும், உலகம், உயிர், உடம்பு இவற்றோடு முழுவதாகக் கலந்தது அது. சிவஞானம் மிகுத்த தவசீலர்கள் கண்டுகொண்டது அது. மூலப்பொருளாக நிறைந்துள்ளதாய், குறைவேயின்றி நிற்பது அது. சாதி, குலம் முதலியன இல்லாதது அது. மேலும், அன்புள்ள அடியார்கள் கூறும் ஞான ஆகாயத்தைச் சார்ந்துள்ள அநுபவம் கொண்ட பெரியோர்கள் மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோக்ஷ வீட்டு இன்பமும் பரம ஆனந்தக்கடலும் போன்றது அது. (இத்தனை பெருமை வாய்ந்தது நின் கழல்). ஐந்து இந்திரியங்களினால் ஏற்படுகின்ற தாக ஆசைகள், மெலிவுகள் ஒழிய அருகில் வந்து அத்தகைய கழலினை நான் பெறும் பாக்கியம் உடையவனோ? பால குமாரா, குகனே, கந்தனே, கிரெளஞ்சமலையைப் பிளந்த வேலாயுதனே, மயில் வாகனனே, என்று சொல்லித் துதித்துக் கொண்டு வந்த வானத்து அமரர்களின் தலைவன் இந்திரனின் கொடும் துயரத்தைப் போக்கியவனே, வாசம் மிகுந்த சந்தனத்தையும், சிறந்த தூய்மையான மங்கலத்தையும், வீரத்திற்கு அறிகுறியான கடகத்தையும் அணிந்த புயங்களை உடையவனே, சிங்க ஏறு போன்ற அழகியவனே, வெற்றி மாலை சூடும், போர்க்களத்தில் சிறந்த வீர சிகாமணியே, வயலூரில் வாழ்பவனே, உலகங்களுக்குத் தலைவியும், இமவான் பெற்ற மின்னொளி போன்றவளும், நீல நிறமுடையவளும், பொன்னிறமுடன் கெளரி எனப்படுபவளும், பராசக்தியும், மங்கைப் பருவத்தாளும், குண்டலினி சக்தியாக விளங்குபவளும், என்றும் இனிய கனி போன்றவளும், எங்களுக்கு அருள் புரியும் அன்னையும், மூன்று உலகங்களையும் பெற்றெடுத்தவளும், நாத வடிவாக விளங்குபவளும், உலகெங்கும் பரவி நின்றவளும், ஆலிலை போன்று வயிறை உடையவளும், பசிய கரும்பு அனையவளும், வெள்ளை நாவல் மரத்தின் கீழ் வீற்றிருக்கும் அரசன் ஜம்புநாதனின் மனைவியும் ஆன வஞ்சிக்கொடி போன்ற உமாதேவி பெற்றருளிய பெருமாளே.
* 4 பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. சிவஞான சித்தியார் சூத்திரம்.
** அகிலம் பரந்தவள் - அகிலாண்ட நாயகி, திருவானைக்கா தேவியின் பெயர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 359 - திருவானைக்கா - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மார்க்கம், தந்தன, சரியை, தனதந்த, போன்றவளும், மாலை, விளங்குபவளும், ஞானம், தொழில், சிறந்த, இடுதல், கிரியை, கலந்தது, கடந்தது, சிவஞானம், சாதி, தகிட, பெருமாளே, மூன்று