பாடல் 346 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - .....;
தாளம் - .......
தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன தனனத்தத் தானத் தானன ...... தந்ததான |
மகுடக்கொப் பாடக் காதினில் நுதலிற்பொட் டூரக் கோதிய மயிரிற்சுற் றோலைப் பூவோடு ...... வண்டுபாட வகைமுத்துச் சோரச் சேர்நகை யிதழிற்சொற் சாதிப் பாரியல் மதனச்சொற் பாடுக் கோகில ...... ரம்பைமாதர் பகடிச்சொற் கூறிப் போர்மயல் முகவிச்சைப் பேசிச் சீரிடை பவளப்பட் டாடைத் தோளிரு ...... கொங்கைமேலாப் பணமெத்தப் பேசித் தூதிடு மிதயச்சுத் தீனச் சோலிகள் பலரெச்சிற் காசைக் காரிகள் ...... சந்தமாமோ தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுடுட்டுட் டாடப் பேரிகை ...... சங்குவீணை தடமிட்டுப் பாவக் கார்கிரி பொடிபட்டுப் போகச் சூரர்கள் தலையிற்றிட் டாடப் போர்புரி ...... கின்றவேலா திகிரிப்பொற் பாணிப் பாலனை மறைகற்புத் தேளப் பூமனை சினமுற்றுச் சேடிற் சாடிய ...... கந்தவேளே தினையுற்றுக் காவற் காரியை மணமுற்றுத் தேவப் பூவொடு திகழ்கச்சித் தேவக் கோன்மகிழ் ...... தம்பிரானே. |
சல்லடைக் கொப்பு என்னும் காதணியும், கொப்பு எனப்படும் காதணியும் காதில் ஆட, நெற்றியில் திலகம் பரவி விளங்க, சிக்கெடுக்கப்பட்டு சீவி வாரப்பட்ட மயிரில் சுற்றி வைத்துள்ள தாழம்பூவில் வண்டு பாட, நல்ல தரமான முத்தும் இழிவு படும்படி விளங்கும் பற்களைக் காட்டி, வாயிதழ்களால் தாங்கள் பேசும் சொற்களையே சாதிப்பவர்கள். பொருந்திய காம லீலைப் பாடல்களைப் பாடுகின்ற குயில் போன்ற, ரம்பையை ஒத்த விலைமாதர்கள். பரிகாசப் பேச்சுக்களைப் பேசி காமப் போர் (மனதில் கிளம்பும்படி) முகத்தில் விருப்பத்தைக் காட்டிப் பேசி, அழகிய இடையில செந்நிறப் பட்டாடையை தோள் மீதும் இரு மார்பகங்களின் மீதும் இறுக்க அணிந்து, பணம் நிரம்பத் தரும்படி பேசி (அதன் பொருட்டு) தூது அனுப்புகின்ற மனத்தை உடைய மிக்க இழிவான தொழிலைப் பூண்டவர்கள். பல பேர்களின் எச்சிலுக்கும் ஆசைப்படும் இவ்வேசிகளின் தொடர்பு நல்லதாகுமா? தகுடத்தத் தானத் தானன திகுடத்தித் தீதித் தோதிமி தடுட்டுடுட் டாட இவ்வாறான ஒலிகளை எழுப்பி பேரிகை, சங்கு, வீணை (ஆகியவைகள்) ஒலித்து வழியைக் காட்டி, (வருபவர்களை உள்ளே மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய) மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே, சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின் பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில் வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே, தினைப் புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து, விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.
* தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 346 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானத், தானன, காட்டி, பேசி, அழகிய, தனனத்தத், என்னும், உடைய, மீதும், தகுடத்தத், உள்ளே, மடக்கி, முனிவர், கொண்டு, திகுடத்தித், தீதித், தம்பிரானே, பேரிகை, கொப்பு, தோதிமி, விளங்கும், காதணியும், டாடப்