பாடல் 344 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - கானடா;
தாளம் - ஆதி
தத்ததன தந்த தத்ததன தந்த தத்ததன தந்த ...... தனதான |
நச்சரவ மென்று நச்சரவ மென்று நச்சுமிழ்க ளங்க ...... மதியாலும் நத்தொடுமு ழங்க னத்தொடுமு ழங்கு நத்திரைவ ழங்கு ...... கடலாலும் இச்சையுணர் வின்றி யிச்சையென வந்த இச்சிறுமி நொந்து ...... மெலியாதே எத்தனையி நெஞ்சில் எத்தனமு யங்கி இத்தனையி லஞ்ச ...... லெனவேணும் பச்சைமயில் கொண்டு பச்சைமற மங்கை பச்சைமலை யெங்கு ...... முறைவோனே பத்தியுட னின்று பத்திசெயு மன்பர் பத்திரம ணிந்த ...... கழலோனே கச்சிவர் குரும்பை கச்சவர்வி ரும்பு கச்சியில மர்ந்த ...... கதிர்வேலா கற்பக வனங்கொள் கற்பகவி சும்பர் கைத்தளைக ளைந்த ...... பெருமாளே. |
விரும்பிப் பிடிக்கவந்த கேது என்ற விஷப்பாம்பு தன்னை மென்று வெளிவிட்ட காரணத்தால், தானும் ஒரு விஷப்பாம்பு போல என் மீது நஞ்சை உமிழ்கின்ற, கறை படிந்த நிலவாலும், சங்குகள் செய்யும் பேரொலியோடும், மேகங்கள் முழக்கும் இடியின் ஒலியினோடும், விசேஷமான அலைகளை வீசும் கடலாலும், பக்தியும் தெளிவும் இல்லாமல், ஆசையுடன் மட்டும் வந்திருக்கிறேன் எனச் சொல்லி வந்திருக்கிற இச் சிறு பெண்ணாகிய அடியாள் மனம் நொந்து உடல் மெலியாமல், எத்தனையோ எண்ணங்களை மனதிற் கொண்டு, முயற்சிகளை மேற்கொண்டு செய்பவளாகிய என்னை இந்த அளவிலேயே அஞ்சல் எனக்கூறி அருள வேண்டும். பச்சை மயிலை வாகனமாகக் கொண்டு, பச்சை நிறமான வேடப் பெண் வள்ளியுடன் பசுமை வாய்ந்த மலையிடங்களில் எல்லாம் வாழ்பவனே, பக்தியில் நிலைத்து முறை தவறாமல் வழிபடும் அன்பர்கள் பூஜிக்கிற இலை, பூக்களைஅணிந்த திருவடிகளை உடையோனே, ரவிக்கை அணிந்த, இளம் தென்னங் குரும்பு போன்ற மார்பினரைக் கைத்து வெறுத்தவர்களாகிய பெரியோர் விரும்பும் கச்சியாகிய காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் ஒளி வேலனே, கற்பகக் காட்டை உடையவர்களும், நீதி நெறியை மனத்தில் கொண்டவர்களுமாகிய தேவர்களின் கை விலங்குகளை அவிழ்த்தெறிந்த பெருமாளே.
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் இயற்றப்பட்டது. புலவர் தம்மை நாயகியாக வைத்துப் பாடுகிறார்.சந்திரன், கடல், முதலியன விரக வேதனையை அதிகரிக்கச் செய்வன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 344 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, கொண்டு, மென்று, தந்த, பெருமாளே, விஷப்பாம்பு, பச்சை, கடலாலும், நச்சரவ, ழங்கு, நொந்து