பாடல் 343 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - தர்பர்;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிடதகதிமி-3 1/2
தகிடதகதிமி-3 1/2
தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் தான தத்தனத் ...... தனதான |
சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி நித்திரைக் கோசம் வேரறச் சீவன் முத்தியிற் கூட வேகளித் ...... தநுபூதி சேர அற்புதக் கோல மாமெனச் சூரி யப்புவிக் கேறி யாடுகச் சீலம் வைத்தருட் டேறி யேயிருக் ...... கறியாமற் பாசம் விட்டுவிட் டோடி போனதுப் போது மிப்படிக் காகி லேனினிப் பாழ்வ ழிக்கடைக் காம லேபிடித் ...... தடியேனைப் பார டைக்கலக் கோல மாமெனத் தாப ரித்துநித் தார மீதெனப் பாத பத்மநற் போதை யேதரித் ...... தருள்வாயே தேசில் துட்டநிட் டூர கோதுடைச் சூரை வெட்டியெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட் கேத மேதவிர்த் ...... தருள்வோனே சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி வித்துருப் பாத னோர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் ...... குருநாதா காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற் ...... புலிவேளூர் காள அத்தியப் பால்சி ராமலைத் தேச முற்றுமுப் பூசை மேவிநற் காம கச்சியிற் சால மேவுபொற் ...... பெருமாளே. |
சீச்சீ என்று வெறுக்கத்தக்க தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி, தூக்கமும், ஆன்மாவை முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற, ஆன்மா முக்தி நிலை அடைந்து விடுதலை பெற, யான் மகிழ்ந்து பேரின்ப அநுபவத்தைப் பெற, அற்புதத் தோற்றம் இது என்று கூறும்படியாக சூரிய மண்டலத்தில் யான் சென்று அங்கு நடனம் புரிய, ஒழுக்க வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல், பாசங்கள் என்னை விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை போதும் போதும். இப்படிப் பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம். இனியாகிலும் இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல் என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து, ஆதரவுடன் யான் நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக உன் திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக. ஞானம் இல்லாத துஷ்டனும், கொடுமை வாய்ந்தவனும், குற்றங்கள் நிறைந்தவனுமான சூரனை வெட்டி, எட்டுத் திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான அறிஞர்களின் துயரத்தை நீக்கி அருளியவனே, தன் திருக்கரங்களில் சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும், பவளம் போன்ற சிவந்த பாதங்களை உடையவருமான சிவபெருமானின் ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி பெற்றெடுத்த அழகிய குருநாதனே, காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா, நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில், திருக்காளத்தி, அதன்பின் திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும் நாடு முழுவதும் மூன்று காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று, நல்ல காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
* பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்): அன்னமய கோசம் - உணவும் உடலும் கூடியது, பிராணமய கோசம் - வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள் இவற்றுடன் உயிரும் கூடியது, மனோமய கோசம் - மனம் மட்டும், விஞ்ஞானமய கோசம் - ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது, ஆனந்தமய கோசம் - ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது, எனப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 343 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தனத், கோசம், யான், அழகிய, கூடியது, நிலை, காடு, இருக்கும், பாணி, போதும், என்னை, பெருமாளே, காசி, சென்று, பஞ்ச