பாடல் 331 - காஞ்சீபுரம் - திருப்புகழ்
ராகம் - .....;
தாளம் - ..........
தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான |
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித் தத்தத் தத்தத் ...... தருவோர்தாள் அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத் தொக்குத் திக்குக் ...... குடில்பேணிச் செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச் செத்துச் செத்துப் ...... பிறவாதே செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச் செச்சைச் செச்சைக் ...... கழல்தாராய் துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத் துட்கத் திட்கப் ...... பொரும்வேலா சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச் சொர்க்கத் தத்தைக் ...... கினியோனே கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக் கத்தக் கத்தக் ...... களைவோனே கற்புச் சத்திப் பொற்புச் சத்திக் கச்சிச் சொக்கப் ...... பெருமாளே. |
அன்றைக்கு அன்றைக்கு (நாள் தோறும்) அலங்கரித்து, அலங்கரித்து, தாம் பெற்ற பொருளுக்குத் தக்க மறு உதவியைக் கொடுப்பவர்களாகிய விலை மகளிர்களுடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும், கண்ணுக்குக் கண்ணாய் பாதுகாத்தும், இந்த உலகின் திக்குகள் தோறும் சென்று கூடி, என் உடலைப் போற்றி வளர்த்து, நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று, இறந்துபட்டு இறந்துபட்டுப் பல பிறவிகளை அடையா வண்ணம் மேலும் மேலும் சொல்லித் துதிக்க, உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்து அருளுக. நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை பயப்பட்டு திடுக்கிடும்படி சண்டை செய்த வேலனே, பரிசுத்தமான, பேரன்புடைய, அழகிய மார்பினை உடைய விண்ணுலகக் கிளியான தேவயானைக்கு இனிமையானவனே, திரண்ட மலையாகிய கிரெளஞ்சத்தை தாக்கிக் குத்தி, (அம் மலை அரக்கன்) கூச்சலிட்டு அழ அழித்துத் தொலைத்தவனே, கற்புக்கு அணிகலமாம் தேவி பார்வதி அளித்த அழகிய சக்திவேலை ஏந்தும் பெருமாளே, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 331 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத், மேலும், அழகிய, பெருமாளே, அலங்கரித்து, அன்றைக்கு, தக்கத், கத்தக், தோறும்