பாடல் 321 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ......;
தாளம் -
தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன தனதன தத்தத் தனந்த தந்தன ...... தனதான |
சலமலம் விட்டத் தடம்பெ ருங்குடில் சகலவி னைக்கொத் திருந்தி டும்படி சதிரவு றுப்புச் சமைந்து வந்தொரு ...... தந்தைதாயும் தரவரு பொய்க்குட் கிடந்த கந்தலி லுறையுமு யிர்ப்பைச் சமன்து ரந்தொரு தனியிலி ழுக்கப் படுந்த ரங்கமும் ...... வந்திடாமுன் பலவுரு வத்தைப் பொருந்தி யன்றுயர் படியுநெ ளிக்கப் படர்ந்த வன்கண படமயில் புக்குத் துரந்து கொண்டிகல் ...... வென்றிவேலா பரிமள மிக்கச் சிவந்த நின்கழல் பழுதற நற்சொற் றெரிந்து அன்பொடு பகர்வதி னிச்சற் றுகந்து தந்திட ...... வந்திடாயோ சிலையுமெ னப்பொற் சிலம்பை முன்கொடு சிவமய மற்றுத் திடங்கு லைந்தவர் திரிபுர மத்தைச் சுடுந்தி னந்திரி ...... திண்கையாளி திருமகள் கச்சுப் பொருந்தி டுந்தன தெரிவையி ரக்கத் துடன்பி றந்தவள் திசைகளி லொக்கப் படர்ந்தி டம்பொரு ...... கின்றஞானக் கலைகள ணைக்கொத் தடர்ந்து வம்பலர் நதிகொள கத்திற் பயந்து கம்பர்மெய் கருகஇ டத்திற் கலந்தி ருந்தவள் ...... கஞ்சபாதங் கருணைமி குத்துக் கசிந்து ளங்கொடு கருதும வர்க்குப் பதங்கள் தந்தருள் கவுரிதி ருக்கொட் டமர்ந்த இநதிரர் ...... தம்பிரானே. |
சலம், மலம் இவைகளை வெளியேற்றுகின்ற மிகப் பெரிய குடிசையில், எல்லா வினைகளும் ஒன்று சேர்ந்து அமையும்படி, அழகாகப் பொறுத்தப்பட்ட அவயவங்கள் சேர்ந்த மனக் களிப்புடன் தந்தையும் தாயும் கலந்து அளிக்க உண்டாகின்ற, பொய்யிலே கிடந்த கிழிபட்ட துணிபோல் அழிந்து போகும் உடலில், இருக்கும் உயிரை யமன் ஓட்டிச் செலுத்தி ஒரு தனியான வகையில் இழுக்கும் மனக் கலக்கமும் வந்து கூடுவதற்கு முன், பல வித நிறங்களைப் பொருந்தியதும், அன்று (போர்க் களத்தில்) சிறந்த பூமியும் நெளியும்படியாக நடந்து சென்றதுமான, வலிமை வாய்ந்த, பீலிக் கண்களை உடைய தோகையை உடைய மயிலில்* ஏறி, அதனைச் செலுத்திச் சென்று போரினை வென்ற வேலனே, நறு மணம் மிகுந்து, சிவந்த உனது திருவடியை, எவ்வகைக் குற்றமும் இல்லாத நல்ல சொற்கள் கொண்டு அறிந்து, அன்புடன் சொல்லும்படியான பாக்கியத்தை இனிச் சற்று நீ மகிழ்ந்து தந்துதவ வர மாட்டாயோ? வில் என்னும்படி பொன் மலையாகிய மேருவை (சிவபிரான்) முன் கையில் கொண்டு, சிவ வழிபாட்டைக் கைவிட்டவர்களும் தமது சக்தி குலைந்தவர்களுமாகிய அசுரர்களையும் திரி புரங்களையும் எரித்த தினத்தில் அந்த வில்லைத் தாங்கிய திண்ணிய திருக் கரத்தைக் கொண்டவள், அழகிய தேவி, கச்சு அணிந்த மார்பகங்களைக் கொண்ட மாது, கருணையுடன் தோன்றியவள், திசைகள் எல்லாவற்றிலும் வியாபித்து இடம் கொண்ட ஞான நூல்கள் உட்பட்ட திரண்ட கலை நூல்கள் அனைத்தையும் நிரம்பக் கற்றவள், புது மலர்களைத் தன்னுள்ளே கொண்ட கம்பை நதிக் கரையில் (காமாக்ஷி சிவனை வழிபடும்போது), (நதியின் வெள்ளத்தைக் கண்டு) பயந்து ஏகாம்பர நாதருடைய சிவந்த உடல் கரு நிறம் கொள்ளுமாறு அவருடைய இடப் பாகத்தில் கலந்திருந்தவள், தனது தாமரைத் திருவடியை அன்பு மேலிட்டு கனிந்த மனம் கொண்டு தியானிக்கும் அடியார்களுக்கு பதவிகளைத் தந்து அருளும் கெளரி அம்மையின் திருக்கோயிலில் (காஞ்சீபுரத்துக்) குமரக்கோட்டத்தில் அமர்ந்திருக்கும் இறைவா, தேவேந்திரனின் தலைவனே.
* இங்கு மயில் என்பது மயிலான இந்திரனைக் குறிக்கும்.இந்த மயிலில் ஏறி சூரனுடன் முருக வேள் சண்டை செய்தார்.சூரன் மயில் வாகனமாவதற்கு முன்பு போர்க்களத்தில் இந்திரன் மயிலாக முருகவேளைத் தாங்கினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 321 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கொண்ட, சிவந்த, கொண்டு, தந்தன, தத்தத், தனந்த, தனதன, மயில், திருவடியை, நூல்கள், பயந்து, கிடந்த, பொருந்தி, மனக், முன், உடைய