பாடல் 318 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - ஆரபி ;
தாளம் - ஆதி - எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும் பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்டதி ருச்செந் ...... திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்புமெ னைச்சங் கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் ...... சுழல்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்நம் பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் ...... றுருகாஎப் பொழுதும் வந்திக்கைக் கற்றஎ னைப்பின் பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன் ...... றுளதோதான் அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந் தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் தமலைதென் கச்சிப் பிச்சிம லர்க்கொந் ...... தளபாரை அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண் டமுதினுந் தித்திக் கப்படு சொற்கொம் பகிலஅண் டத்துற் பத்திசெய் முத்தின் ...... பொலமேருத் தனிவடம் பொற்புப் பெற்றமு லைக்குன் றிணைசுமந் தெய்க்கப் பட்டநு சுப்பின் தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் ...... பையினூடே தவமுயன் றப்பொற் றப்படி கைக்கொண் டறமிரண் டெட்டெட் டெட்டும் வளர்க்கும் தலைவிபங் கர்க்குச் சத்யமு ரைக்கும் ...... பெருமாளே. |
பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்த பாம்பு மலையாகிய திருச்செங்கோட்டையையும், பழனியையும், தெற்கில் உள்ள சுவாமி மலையையும், கதிர்காமத்தையும், புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தூரையும், வேலாயுதத்தையும், கனவில் கூடச் சொல்லி அறியாத என்னை, சங்கடம் தரும் உடலின் சுகத்துக்கு வேண்டிய சகல பொருள்களையும், திருட்டு வழியிலாவது அடைந்து (கபட) யோசனைகளிலேயே நோக்கம் கொண்டு சுழலும் என்னை, பரிசுத்தமானவனுடைய தேவி பார்வதியின் கையில் விளங்கும் இரத்தினம், பழைய கங்கா தேவிக்குக் கிடைத்த புதிய முத்து, பூமியில் அன்றாடம் என்று ஒன்றும் சேமித்து வைக்காமல் இறைவனிடம் யாவற்றையும் விட்டு இளைத்த பெரியோர்களின் காப்பு நிதி என்று கூறி உருகி, எல்லாப் பொழுதினிலும் வணங்குதலே இல்லாத என்னை, (என் குறைகளை அறிந்த) பின்னும் என் குற்றங்களைப் பொருட்படுத்தாது பொறுத்துச் சம்மதித்து உனது பக்தர்கள் கூட்டத்துள் ஒருவனாக வைத்துள்ள உனது கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது, (உன் கருணைக்கு) நிகர் ஒன்று உண்டோ? (நீ வேறு நான் வேறு இல்லை என்ற) அத்துவைத நிலையைப் பெற்று எவ்வித பற்றும் நன்றாக அற்றுப் போய், தெளிவு அடைந்த மனம் கொண்ட சித்தத்தவர்களின் தெளிந்து உணர்ந்த பூங்கொத்துக்கள் அணிந்த நிர்மலம் ஆனவள், அழகிய கச்சிப் பதியில் பிச்சி மலரை அணிந்துள்ள கூந்தலை உடைய பரா சக்தி, அறச் செல்வி, நுண்ணிய பச்சை நிறமுள்ள அழகிய கொடி போன்றவள், கற்கண்டு, அமுது இவை இரண்டைக் காட்டிலும் இனிக்கும் சொற்களை உடைய கொடியனையாள், எல்லா அண்டங்களையும் தோற்றுவிக்கும் முத்து, பொன்னாலான மேருமலை, ஒப்பற்ற மணி வடத்தின் அழகு பெற்ற இரண்டு மலை மார்புகளைச் சுமந்து அதனால் இளைத்து நிற்கும், இடையை உடைய இளமைப் பருவத்தினளான உமா தேவி, சங்குகள் பொருந்தித் ததும்பிப் பரவிச் செல்லும் அலைகளை உடைய கம்பை ஆற்றுக்கு அருகே, தவம் செய்து, அந்தச் சிறப்புள்ள இரு நாழி நெல்லைக் கையில் கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும்* வளர்த்த தலைவியாகிய காமாட்சி தேவியின் பங்காளராகிய சிவபெருமானுக்கு மெய்ப் பொருளாகிய பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே.
* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல், தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 318 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உணவு, உடைய, என்னை, தனதனந், தத்தம், தத்தத், தத்தன, முப்பத்திரண்டு, நல்கல், அமைத்தல், மருந்து, காத்தல், தொழில், வளர்த்தல், அநாதைகளுக்கு, நான், கொண்டு, பெருமாளே, கச்சிப், தேவி, கையில், வேறு, உனது, முத்து, அழகிய