பாடல் 315 - காஞ்சீபுரம் - திருப்புகழ்

ராகம் - தோடி; தாளம்
- ஆதி
- எடுப்பு - 1/2 இடம்
- எடுப்பு - 1/2 இடம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான |
கறையிலங் குக்ரச் சத்தித ரிக்குஞ் சரவணன் சித்தத் துக்குளொ ளிக்குங் கரவடன் கொற்றக் குக்குட வத்தன் ...... தனிவீரக் கழலிடும் பத்மக் கட்செவி வெற்பன் பழநிமன் கச்சிக் கொற்றவன் மற்றுங் கடகவஞ் சிக்குக் கர்த்தனெ னச்செந் ...... தமிழ்பாடிக் குறையிலன் புற்றுக் குற்றம றுக்கும் பொறைகள்நந் தற்பப் புத்தியை விட்டென் குணமடங் கக்கெட் டுக்குண மற்றொன் ...... றிலதான குணமடைந் தெப்பற் றுக்களு மற்றுங் குறியொடுஞ் சுத்தப் பத்தரி ருக்குங் குருபதஞ் சித்திக் கைக்கருள் சற்றுங் ...... கிடையாதோ பிறைகரந் தைக்கொத் துப்பணி மத்தந் தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் பிரமனன் றெட்டற் கற்றதி ருக்கொன் ...... றையும்வேணிப் பிறவுநின் றொக்கத் தொக்கும ணக்குஞ் சரணியம் பத்மக் கைக்கொடி முக்கண் பெறுகரும் பத்தக் கத்தருள் நற்பங் ...... கயவாவி திறைகொளுஞ் சித்ரக் குத்துமு லைக்கொம் பறியுமந் தத்தைக் கைக்கக மொய்க்குந் த்ரிபுரைசெம் பட்டுக் கட்டுநு சுப்பின் ...... திருவான தெரிவையந் துர்க்கிச் சத்தியெ வர்க்குந் தெரிவருஞ் சுத்தப் பச்சைநி றப்பெண் சிறுவதொண் டர்க்குச் சித்திய ளிக்கும் ...... பெருமாளே. |
(இரத்தக்) கறை விளங்கும் உக்கிரம் பொருந்திய வேற்படையை ஏந்தும் சரவண மூர்த்தி, மனத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் திருடன், வீரம் வாய்ந்த கோழிக் கொடியை ஏந்திய கையன், ஒப்பற்ற வீரக்கழலை அணிந்துள்ள தாமரை போன்ற திருவடியை உடையவன், பாம்பு மலையான் (திருச்செங்கோட்டு மலையான்), பழனி மலையான், காஞ்சீபுரத்து வீரன், பின்னும் கைவளை அணிந்த வள்ளிக் கொடி போன்ற வள்ளிக்குத் தலைவன் என்று செந்தமிழ்ப் பாக்களைப் பாடி, குறைவு படாத அன்பு பூண்டு, குற்றங்களை விலக்க வல்ல பொறுமைக் குணம் சிறந்து மேம்பட, அற்பமான புத்தியை ஒழித்து, என்னுடைய தீய குணங்கள் எல்லாம் கெட்டு, குணம் வேறு ஒன்று இல்லாததான ஒரே நிலையான சாத்துவிகக் குணம் ஒன்றையே அடைந்து, எல்லாவிதமான ஆசைகளையும் ஒழித்து, கடவுள் குறி ஒன்றையே கருதும் பரிசுத்தமான பக்தர்கள் இருக்கும் பெருமை பொருந்தும் ஞான நிலை எனக்குக் கை கூடுவதற்கு உனது திருவருள் சற்றேனும் கிடைக்காதோ? சந்திரன், திருநீற்றுப் பச்சைக் கொத்துக்கள், பாம்பு, ஊமத்தம் மலர், கபால எலும்பு, கங்கை நீர், கொக்கின் இறகு, ருத்ராக்ஷ மாலை பிரமன் முன்பு எட்டுதற்கு அரிதாக இருந்த அழகிய கொன்றை இவை எல்லாம் அணிந்த சடை மற்றவைகளும் விளங்கி ஒன்று சேர்ந்து கூடி (சிவபெருமான் வீழ்ந்து வணங்குவதால் அவர் தலையில் உள்ள பொருள்களின்) மணம் வீசும் திருவடி உடையவள், அழகிய தாமரை போன்ற திருக்கரத்தை உடைய கொடி போன்றவள், மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், அந்தத் தக்கதான பொருளை (அடியேனுக்கு) அருள் செய்பவள், நல்ல திருக் குளத்துத் தாமரையையும் வென்று அடக்கும் அழகிய, திரண்டு குவிந்த மார்பைக் கொண்ட கொம்பு போன்றவள், ஞானமுள்ளவள், அழகிய கிளி கையில் பயின்று இருக்கும் திரிபுரை (சந்திர கண்டம், சூரிய கண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவை உடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய, லக்ஷ்மிகரம் பொருந்திய நங்கை, அழகிய துர்க்கா தேவி, பராசக்தி, எல்லோருக்கும் தெரிவதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறம் கொண்ட பெண் ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே, அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 315 - காஞ்சீபுரம் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அழகிய, குணம், உடைய, போன்றவள், கண்டம், கொண்ட, தனதனந், மலையான், தத்தம், தத்தன, தத்தத், ஒன்றையே, ஒன்று, இருக்கும், பத்மக், எல்லாம், மற்றுங், ஒழித்து, பாம்பு, தாமரை, பொருந்திய, சுத்தப், அணிந்த, புத்தியை, கொடி, பெருமாளே