பாடல் 279 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - தந்யாசி;
தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தனன தானனம் தனன தானனம் தனன தானனம் ...... தனதான |
பகலி ராவினுங் கருவி யாலனம் பருகி யாவிகொண் ...... டுடல்பேணிப் பழைய வேதமும் புதிய நூல்களும் பலபு ராணமுஞ் ...... சிலவோதி அகல நீளமென் றளவு கூறரும் பொருளி லேயமைந் ...... தடைவோரை அசடர் மூகரென் றவல மேமொழிந் தறிவி லேனழிந் ...... திடலாமோ சகல லோகமும் புகல நாடொறுஞ் சறுகி லாதசெங் ...... கழுநீருந் தளவு நீபமும் புனையு மார்பதென் தணிகை மேவுசெங் ...... கதிர்வேலா சிகர பூதரந் தகர நான்முகன் சிறுகு வாசவன் ...... சிறைமீளத் திமிர சாகரங் கதற மாமரஞ் சிதற வேல்விடும் ...... பெருமாளே. |
பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால் சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான், பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும் பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து, இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை, மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா? எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி, தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும் தரிக்கின்ற மார்பனே, அழகிய திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா, சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக, பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த இந்திரனும் சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற, இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக, மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட, வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 279 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானனம், சூரனது, மலரும், நூல்களையும், பெருமாளே, இத்தனை