பாடல் 272 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - கானடா ;
தாளம் - ஆதி ; - எடுப்பு - 1/2 இடம்
தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன ...... தனதான |
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு ...... தவமூழ்குந் தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர் போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல் சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை ...... தடுமாறிப் போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள் போற்றுத லற்றது ரோகியை மாமருள் பூத்தம லத்ரய பூரியை நேரிய ...... புலையேனைப் போக்கிவி டக்கட னோஅடி யாரொடு போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் ...... புரிவாயே மூக்கறை மட்டைம காபல காரணி சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரி ...... முழுமோடி மூத்தவ ரக்கனி ராவண னோடியல் பேற்றிவி டக்கம லாலய சீதையை மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடு ...... முகிலேபோய் மாக்கன சித்திர கோபுர நீள்படை வீட்டிலி ருத்திய நாளவன் வேரற மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன் ...... மருகோனே வாச்சிய மத்தள பேரிகை போல்மறை வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை வாய்த்ததி ருத்தணி மாமலை மேவிய ...... பெருமாளே. |
தாக்கிச்செய்ய வேண்டிய போருக்கு ஒரு சாரைப்பாம்பு சென்றதைப் போன்றவனை (கோழை), அருகில் வேறு ஒருவரையும் சாக்ஷியாக வைத்து உண்பிக்காமல் தான்மாத்திரம் உண்ணுபவனை (சுயநலவாதி), திருநீற்றைத் தரிக்கிற சைவசாஸ்திர வழிக்கு வெகு தொலைவில் உள்ளவனை (சிவத்வேஷி), மரத்தைத் தாங்கும் வேர்போல் உயிரைத்தாங்கும் தவத்தில் மூழ்கும் நற்பயனை விடுத்து வீணில் உழலும் பாவியை (நாஸ்திகன்), புலவர் போல நடித்துக்கொண்டு, அன்போடு உன்னை நினையாமல், சண்டை செய்து தமிழிலே வைது வாதிட்டுக் குரைக்கும் நாயினை (நாய் போன்றவன்), இந்தநாள் வரைக்கும் தடுமாற்றம் அடைந்து, வேறு புகலிடம் இல்லாத வீணனை (வீணன்), மெய்யறிவாளர்களைப் போற்றாதுவிட்ட துரோக சிந்தனை உடையவனை (துரோகி), பெரும் அஞ்ஞானம் நிறைந்த மும்மலங்கள் (ஆணவம், கன்மம், மாயை) சேர்ந்த கீழ்மகனை (மகாபாவி), பறையனுக்குச் சமானமானவனை (மிலேச்சன்), இத்தகைய பாவியாகிய அடியேனை (முருகா, நீ) நீக்கிவிடக் கடவதோ? (இதுவரை அருணகிரியார் தம்மைத் தாழ்த்திக் கொண்டு கோழை, சுயநலவாதி, சிவத்வேஷி, நாஸ்திகன், நாய்போன்றவன், வீணன், துரோகி, மகாபாவி, மிலேச்சன் என்று கூறுகிறார்). மோக்ஷ உலகில் உன் அடியார்களோடு சேர்ந்து யானும் போய் பெறக்கூடிய பாக்கியம் எனக்கு இல்லையா? போர் செய்வதும், ஒளிவிடுவதுமான வைரம் போன்ற கூரிய வேலினையும், மயிலினையும் உடையவனே, திருவருள் புரியவேண்டும். (இனி, ராமாயணக் கதைக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்). மூக்கு அறுபட்டவளும், அறிவில்லாதவளும், பெரும் வலிமையுள்ளவளும், ராவணாதியர்களின் வதைக்கு காரணமாக இருந்தவளும், சூர்ப்பநகையென்ற பெயருடன், மூளியான கொடியவளும், அவமதிக்கத் தக்கவளும், மூர்க்க குணமுள்ள அசுர குலத்தில் பிறந்தவளும், விபீஷணருக்கு சகோதரியும், முழு மாயக்காரியும் ஆகிய சூர்ப்பநகை, அண்ணனும் அரக்கனுமான ராவணனிடம் சென்று சீதையின் அழகின் தன்மையை அவன் மனத்தில் புகுத்திவிட, தாமரைக் கோவிலில் வாழும் லக்ஷ்மியாகிய சீதாதேவியை மூர்க்கனாகிய அந்த ராவணன் மாயமாகக் கவர்ந்து ஒற்றைத் தேரிலே வைத்து மேகமண்டலம் சென்று, பிரசித்தி பெற்ற, அழகிய கோபுரங்கள் நிறைந்த, நீண்ட சேனைகள் உள்ள இலங்கையில் (அசோகவனத்தில்) சிறை வைத்தபோது, அந்த ராவணனின் வம்சமே வேரோடு அற்றுப்போகும்படி, அதற்குரிய வழியை நிறைவேற்றிய வில்லாதி வீரர்களின் தலைவனாம் ராமனின் மருமகனே, வாத்தியங்களான மத்தளம், பேரிகை இவற்றின் ஓசை போல வேதியரின் வேத கோஷங்கள் வாழ்த்தவும், செங்கழுநீர் மலரை நாள்தோறும் தருகின்ற நீண்ட சுனை வாய்க்கப் பெற்ற திருத்தணிகை என்னும் பெருமலையில் மேவிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 272 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, தத்தன, தாத்தன, பெரும், நிறைந்த, துரோகி, மகாபாவி, சென்று, நீண்ட, பெற்ற, அந்த, வீணன், மிலேச்சன், சுயநலவாதி, மேவிய, பேரிகை, மூர்க்க, பாவியை, பெருமாளே, கோழை, சிவத்வேஷி, வைத்து, வேறு, நாஸ்திகன்