பாடல் 26 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - கமாஸ்;
தாளம் - சதுஸ்ர ரூபகம் - 6
தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் தனதன தந்தாத் தந்தத் ...... தனதானா |
அவனிபெ றுந்தோட் டம்பொற் குழையட ரம்பாற் புண்பட் டரிவையர் தம்பாற் கொங்கைக் ...... கிடையேசென் றணைதரு பண்டாட் டங்கற் றுருகிய கொண்டாட் டம்பெற் றழிதரு திண்டாட் டஞ்சற் ...... றொழியாதே பவமற நெஞ்சாற் சிந்தித் திலகுக டம்பார்த் தண்டைப் பதயுக ளம்போற் றுங்கொற் ...... றமுநாளும் பதறிய அங்காப் பும்பத் தியுமறி வும்போய்ச் சங்கைப் படுதுயர் கண்பார்த் தன்புற் ...... றருளாயோ தவநெறி குன்றாப் பண்பிற் றுறவின ருந்தோற் றஞ்சத் தனிமல ரஞ்சார்ப் புங்கத் ...... தமராடி தமிழினி தென்காற் கன்றிற் றிரிதரு கஞ்சாக் கன்றைத் தழலெழ வென்றார்க் கன்றற் ...... புதமாகச் சிவவடி வங்காட் டுஞ்சற் குருபர தென்பாற் சங்கத் திரள்மணி சிந்தாச் சிந்துக் ...... கரைமோதும் தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றுங்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் ...... பெருமாளே. |
இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள தோடு விளங்கும் மிக அழகிய காதை நெருங்கிவரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு, மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று அணைகின்ற பழைய விளையாட்டுக்களைக் கற்று, உருகிய பெரும் சந்தோஷத்தைப் பெற்று, பின்பு அழிவைத்தரும் திண்டாட்டம் கொஞ்சம் ஒழியக் கூடாதா? பிறவி நீங்க வேண்டி நெஞ்சால் சிந்தித்து, விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன் பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும், தினமும் உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது போய் அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு அருளமாட்டாயோ? தவநெறி குறையாத குணத்துத் துறவிகளும் தோற்று அஞ்சும்படி, தனது ஒப்பற்ற மலர் அம்புகள் ஐந்தின் கொத்துக்களுடன் போர் செய்து, தமிழ்போல் இனிய இளம் தென்றல் காற்றில் உலாவும் மன்மதனாம் லக்ஷ்மி மகனை, நெருப்பை எழுப்பி வென்ற சிவபிரானுக்கு அன்று அற்புதமாக பேரின்ப உண்மையாம் மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே, தெற்குத் திசையில் கடற்கரையிலே சங்கின் குவியல்கள் மணிகளைச் சிந்தி மோதுகின்றதும், சூரியனின் தேரில் பூட்டியுள்ள வலிய குதிரைகளுக்கு கால்கள் இடறும்படியாக உயர்ந்துள்ள சிகரங்களை உடைய மதில் சூழ்ந்துள்ளதுமான செல்வம் கொழிக்கும் திருச்செந்தூரில் உள்ள கந்தப் பெருமாளே.
* 'கஞ்சா' என்பது தாமரையில் அமர்ந்த லக்ஷ்மியையும், 'கன்று' என்பது அவள் மகன் 'மன்மதனை'யும் குறிப்பன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 26 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தத், தந்தாத், என்பது, பெருமாளே, தவநெறி, கந்தப்