பாடல் 25 - திருச்செந்தூர் - திருப்புகழ்

ராகம் - புன்னாக
வராளி; தாளம் - அங்கதாளம் - 24
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3
தனதனன தான தானன தனதனன தான தானன தனதனன தான தானன தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான |
அருணமணி மேவு பூஷித ம்ருகமதப டீர லேபன அபிநவவி சால பூரண அம்பொற் கும்பத் ...... தனமோதி அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென அறவுமுற வாடி நீடிய அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி இருணிறைய மோதி மாலிகை சருவியுற வான வேளையி லிழைகலைய மாத ரார்வழி யின்புற் றன்புற் ...... றழியாநீள் இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன் இணையடிகள் பாடி வாழஎ னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய சதுர்மறையி னாதி யாகிய சங்கத் துங்கக் ...... குழையாளர் தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி தனைமுழுதும் வாரி யேயமு துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும் செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை தெளிவினுடன் மூல மேயென முந்தச் சிந்தித் ...... தருள்மாயன் திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய ஜெயசரவ ணாம னோகர செந்திற் கந்தப் ...... பெருமாளே. |
சிவந்த மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாய், கஸ்தூரி, சந்தனம் இவற்றின் கலவையைப் பூசியதாய், புதுமை வாய்ந்ததும், அகன்றதும், நிறைந்ததுமான அழகிய பொற்குடம் போன்ற மார்பில் பட்டு, ஆசை மொழி பேசிக் கொஞ்சும் மாதர்களின் சரசலீலைகளில் மூழ்கி, திருமஞ்சனம் இதுதான் என்று அவர்களோடு மிகவும் கலந்து பொழுதைக் கடத்தி, அவர்களின் கைகளிலும் மார்பிலும் இன்பம் பெறுபவனாய், கருமை நிறைந்த அழகிய கூந்தலில் உள்ள மாலையானது, தழுவி உறவு கொள்ளும் வேளையில், நகைகளோடு சேர்ந்து கலைய, அம் மாதர்களின் வசத்தே இன்பம் கொண்டும், அன்பு கொண்டும் அழிந்து, நெடும் போது இரவும் பகலும் மோகம் கொண்டவனாய், இப் பூமியில் இறவாமல், நானும் உன் இணையடிகளைப் பாடி வாழ்வுற, என் நெஞ்சிலே சிறந்த உபதேசச் சொற்களைப் பதித்து அருள்வாயாக. இளமையும், அழகும், ஆடலும் உடைய பாம்புகளை அணிந்த வளைந்த ஜடாமுடியை உடைய ஆதிப் பரம் பொருள் ஆனவரும், ஓதப்படும் வேதங்களின் ஆதிப்பொருளானவரும் ஆகிய, வெண்சங்கைக் குண்டலமாகத் தரித்த சிவனார் தந்தருளிய முருகனே, கார்மேக வண்ணத்தாரும், ஒலிக்கின்றதும் மகர மீன்கள் நிறைந்ததுமான சமுத்திரம் சூழ்ந்த இந்த உலகம் முழுமையும் வாரி அமுதென ஒரே வாயில் உண்டு தேவர்களுக்கு அருள் செய்தவரும், போர்க்களத்தில் முதன்மையாளராக இருப்பவரும், மிக்க வலிமையும், அதிக மதம் பெருகும் கன்னங்களும், கொண்ட பெரிய மலை போன்ற கஜேந்திரன் என்ற யானை தெளிந்த சிந்தையோடு ஆதிமூலமே என்று அழைத்துச் சரணடைய, முன்னதாக உதவும் சிந்தையோடு ஓடிவந்து அருளிய மாயனாம் திருமாலின் அழகிய மருகனே, சூரனது மார்புடன், கிரெளஞ்ச மலையையும் உருவிச் செல்லும்படி வேலாயுதத்தைச் செலுத்திய ஜெய சரவணனே, மனத்துக்கு இனியவனே, திருச்செந்தூரில் வீற்றிருக்கும் கந்தப்பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 25 - திருச்செந்தூர் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தானன, தகதகிட, அழகிய, தகிடதகதிமி, இன்பம், மாதர்களின், உடைய, சிந்தையோடு, கொண்டும், பாடி, தகிட, தந்தத், மேவு, வாரி, நிறைந்ததுமான