பாடல் 246 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - லலிதா;
தாளம் - கண்டசாபு - 2 1/2
தகிட-1 1/2, தக-1
தகிட-1 1/2, தக-1
தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன ...... தனதான |
உய்யஞா னத்துநெறி கைவிடா தெப்பொழுது முள்ளவே தத்துறைகொ ...... டுணர்வோதி உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப்பொருளை யுள்ளமோ கத்தருளி ...... யுறவாகி வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய வல்லமீ துற்பலச ...... யிலமேவும் வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீ சுற்றுமலர் ...... பணிவேனோ பையரா வைப்புனையு மையர்பா கத்தலைவி துய்யவே ணிப்பகிர ...... திகுமாரா பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது நெய்யனே சுற்றியகு ...... றவர்கோவே செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு கையமால் வைத்ததிரு ...... மருகோனே தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே. |
நான் கடைத்தேறுவதற்கான ஞான மார்க்கத்தை எப்பொழுதும் கைவிடாமல் பற்றி, உள்ள வேத சாஸ்திரங்களைக் கொண்டு அறிவு தெளிவுற ஓதி, என்னிடம் உள்ள மயக்க இருளை நீக்க, ஆசை வைக்கவேண்டிய பொருளாகிய மோக்ஷ இன்பத்தை கருதும் ஆசை உன் அருளால் கிடைத்து உன்னுடன் உறவு நெருங்க வேண்டும். உலகம் ஏழினையும் நிலை நிறுத்திக் காக்கும் நீதி கொண்டவனே, பழமையான மலையாகிய திருவல்லத்திலும்*, நீலோத்பல கிரியான திருத்தணிகை மலையிலும் வாழும் வள்ளி நாயகனே, உன்னைப் புதிய வில்வ மரத்திலுள்ள இளம் கொழுந்து இலைகளை பறித்து வீசி அர்ச்சித்து உன் பாத மலர்களைப் பணிய மாட்டேனோ? படம் உள்ள நாக ஆபரணத்தை அணிந்த தலைவர் சிவனார், அவரின் இடப்பாகத்தில் உள்ள தலைவி பார்வதி, தூய ஜடாமுடியில் உள்ள பாகீரதியாகிய கங்கை - இம்மூவரின் குமாரனே, மெதுவாக மோகம் பற்றி (வள்ளி மனத்தில்) வளர்ந்த வள்ளிமலைமீது முதிர்ந்த நேயம் கொண்டவனே, சூழ்ந்துள்ள குறவர்களுக்குத் தலைவனாக ஆனவனே, மயக்கத்தைச் செய்யும் மாயமான கிரெளஞ்ச மலையை உருவும்படியாக வெப்பமான வேலைச் சுழற்றி விடுத்த கரத்தினனே, திருமால் அன்போடு மார்பில் வைத்த லக்ஷ்மியின் மருமகனே, தெய்வத்தன்மையுடைய யானைமுகன் விநாயகனுக்குத் தம்பியே, வெள்ளையானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைத் தேவிக்கு இனிய பெருமாளே.
* திருவல்லம் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 8 மைலில் நீவா நதிக்கரையில் உள்ளது. திருத்தணிகையும், வள்ளிமலையும் அருகில் உள்ளன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 246 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - உள்ள, தய்யனா, தத்ததன, கொண்டவனே, வள்ளி, பெருமாளே, தெய்வயா, பற்றி