பாடல் 245 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் - நளினகாந்தி;
தாளம் - ஆதி தேசாதி
தனனதன தான தனனதன தான தனனதன தான ...... தனதான |
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி யுளமகிழ ஆசு ...... கவிபாடி உமதுபுகழ் மேரு கிரியளவு மான தெனவுரமு மான ...... மொழிபேசி நடைபழகி மீள வறியவர்கள் நாளை நடவுமென வாடி ...... முகம்வேறாய் நலியுமுன மேயு னருணவொளி வீசு நளினஇரு பாத ...... மருள்வாயே விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர் விகிர் தர்பர யோகர் ...... நிலவோடே விளவு சிறு பூளை நகுதலையொ டாறு விடவரவு சூடு ...... மதிபாரச் சடையிறைவர் காண உமைமகிழ ஞான தளர் நடையி டாமுன் ...... வருவோனே தவமலரு நீல மலர்சுனைய நாதி தணிமலையு லாவு ...... பெருமாளே. |
செல்வம் படைத்தவர்கள் எவர்கள் எவர்கள் என்று தேடி, அவர்கள் மனம் மகிழ அவர்கள் மீது ஆசுகவிகளைப்* பாடி, உம் புகழ் மேருமலை அளவு உயர்ந்தது எனக் கூறியும், வலிமையானமுகஸ்துதி மொழிகளைப் பேசியும், நடந்து நடந்து பலநாள் போய்ப் பழகியும், தரித்திரர்களாகவேமீளும்படி, நாளைக்கு வா என்றே கூற, அதனால் அகம் வாடி முகம் களை மாற, வருந்தும் முன்னதாகவே, உனது சிவந்த ஒளி வீசுகின்ற தாமரை போன்ற இரு பாதங்களையும் தந்தருள்வாயாக. ரிஷபத்தை வாகனமாகச் செலுத்துபவரும், பரிசுத்தரும், திரிசூலத்தை ஏந்தியவரும், மிக்க உயர்ந்தவரும், மேலான யோகத்தவரும், பிறைச்சந்திரன், விளாமர (வில்வ) த் தளிர், சிறிய பூளைப் பூ, பற்களுடன் கூடிய மண்டையோடு, இவற்றோடு கங்கை ஆறு, விஷப்பாம்பு ஆகியவற்றைத் தரித்துள்ள மிகுந்த பாரமான ஜடாமுடியுடைய சிவபெருமான் கண்டு களிக்கவும், உமாதேவி பார்த்து மகிழவும், ஞானத் தளர் நடையிட்டு அவர்கள் முன்னே வருபவனே, மிகுத்து மலரும் நீலோத்பலப் பூக்கள் உள்ள சுனையுடையதும், ஆதியில்லாததுமான மிகப் பழைய திருத்தணிகை மலை மீது உலாவும் பெருமாளே.
* தமிழ்க் கவிதைகள் நான்கு வகைப்படும்:ஆசு - எதுகை மோனையுடன் கூடியது,மதுரம் - இனிமை வாய்ந்தது,சித்திரம் - கற்பனையும் அழகும் மிக்கது,வித்தாரம் - வர்ணனை மிக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 245 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனதன, நடந்து, மிக்கது, மீது, பெருமாளே, வாடி, தளர், எவர்கள்