பாடல் 240 - திருத்தணிகை - திருப்புகழ்

ராகம் -
நாதநாமக்ரியா/ஷண்முகப்ரியா; தாளம் - ஆதி
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான |
அரகர சிவனரி அயனிவர் பரவிமு னறுமுக சரவண ...... பவனேயென் றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில் அநலென எழவிடு ...... மதிவீரா பரிபுர கமலம தடியிணை யடியவர் உளமதி லுறவருள் ...... முருகேசா பகவதி வரைமகள் உமைதர வருகுக பரமன திருசெவி ...... களிகூர உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை உரைதரு குருபர ...... வுயர்வாய உலகம னலகில வுயிர்களு மிமையவ ரவர்களு முறுவர ...... முநிவோரும் பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி பணிதிகழ் தணிகையி ...... லுறைவோனே பகர்தரு குறமகள் தருவமை வநிதையு மிருபுடை யுறவரு ...... பெருமாளே. |
பாவங்களைப் போக்கவல்ல சிவனும், திருமாலும், பிரம்மாவும், ஆகிய இம்மூவரும் போற்றி நின்று உனது முன்னிலையில் ஆறுமுகனே, சரவணபவனே, என்று கூறி நாள்தோறும் துதிக்க, சூரன் முதலிய அசுரர்கள் அழியுமாறு அக்கினி போல எழும்பிய வேலினை விடுத்த வீர மூர்த்தியே, வீரச் சிலம்பு அணிந்த, தாமரை மலர் போன்ற உன் திருவடிகளை உன் அடியார்களின் உள்ளத்தில் பொருந்துமாறு அருள்செய்யும் முருகக் கடவுளே. மலையரசன் மகளாக வந்த பகவதியின் அருளினால் வந்த குகனே, சிவனின் இருசெவிகளும் மகிழும்படி யாவரும் புகழும் ஒப்பற்ற மொழியாகிய பிரணவ மந்திரத்தின் முடிவுப்பொருளை உபதேசித்த மேலான குருவே, உயர்ந்த இவ்வுலகில் வாழும் எண்ணற்ற உயிர்களும் தேவர்களும் பெருந்தவ சிரேஷ்டரான முனிவர்களும் உன் முன்னேவணங்கி துதி செய்து, நாள்தோறும் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அழகியதும், வாசுகி என்ற நாகம் வழிபட்டதுமாகிய* திருத்தணிகைத் தலத்தில் வாழ்பவனே, புகழ்வாய்ந்த குறப்பெண் வள்ளியும், கற்பகத்தருவின் கீழே வளர்ந்த தேவயானையும், இருபுறமும் பொருந்த வந்த பெருமாளே**.
* பாற்கடல் கடைந்தபோது வாசுகி என்ற நாகம் கயிறாக உதவியது. அதனால் புண்பட்ட நோய் நீங்க, வாசுகி திருத்தணிகைக்கு வந்து முருகனைப் பூஜிக்க நோய் தணிந்த வரலாறு இங்கு கூறப்பட்டுள்ளது.
** வள்ளியும் தேவயானையும் வலமும் இடமுமாக விளங்க முருகன் திருத்தணியில் வீற்றிருக்கிறான். வள்ளி = இச்சாசக்தி, தேவயானை = ஞானசக்தி.இப்பாடல் துதிமயமானது. வேண்டுதல் ஒன்றும் இல்லாதது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 240 - திருத்தணிகை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, வாசுகி, வந்த, வள்ளியும், தேவயானையும், நோய், நாகம், பரவிமு, நாள்தோறும், அசுரர்கள், பிரணவ