பாடல் 238 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதான தத்த தந்த தனதான தத்த தந்த தனதான தத்த தந்த ...... தனதான |
விழியால்ம ருட்டி நின்று முலைதூச கற்றி மண்டு விரகான லத்த ழுந்த ...... நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவேப ரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து ...... சிலநாள்மேல் மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி ணங்கள் ...... வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் ...... தருவாயே பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று பொருதாளெ டுத்த தந்தை ...... மகிழ்வோனே புருகூத னுட்கு ளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதாம்ரு கக்க ரும்பு ...... புணர்மார்பா செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற ...... முருகோனே திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேர கத்த மர்ந்த ...... பெருமாளே. |
கண்களால் மருட்டி நின்று, மார்பின் மேல் உள்ள மேலாடையை நீக்கி, மூண்டு எழும் காம அக்கினியில் தம்மைக் கண்டவர் அழுந்தும்படி நகை புரிந்து, விலையாக நிரம்பச் செம்பொற்காசுகள் வரவும், தமது சூழ்ச்சியைப் பரப்பி, வஞ்சகம் நிறைந்த காம லீலைகளுக்கு உடன்பட்டு, சில நாட்கள் போன பிறகு, சொல்லாத சொற்களைச் சொன்னதாகச் சொல்லி, சண்டையும் கூச்சலுமாகி ஏற்படும் பகைமை பூணுகின்ற முழு மாயக்காரிகளாகிய பிணங்கள் போன்ற பொது மகளிரின் வசத்தில் அகப்பட்டு என் வாழ்க்கை முடிவுறாமல், பொன் கிண்கிணிகள் செய்யும் இசையும், வெட்சி மலரும் சேர்ந்துள்ள, என்றும் இளமையான, நன்மை அளிக்கும் உன் திருவடிகளைத் தந்து அருள்வாயாக. பொழிகின்ற மழை மேகத்தை நிகர்க்கும் கருமையான யமராஜன் அஞ்சும்படி அன்று, போர் வல்ல திருத்தாளை நீட்டிய தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் முருகனே, இந்திரன் மனம் குளிரும்படியாக தேவருலகத்தைக் காத்தருளிய வல்லமை வாய்ந்தவனே, தூய்மையானவனே, மான் ஈன்ற கரும்பு போன்ற இனிய வள்ளியை அணைக்கும் மார்பனே, செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருக்கும் கிழப் பிரமன் நாணும்படி, அன்று நிறை செல்வப் பேருண்மையை (பிரணவப் பொருளை) சொல்லி அருளிய முருகனே, (நின் திருமார்பில் உள்ள) திரளான ரத்தினக் கூட்டங்கள் சூரிய உதய ஒளியை வென்ற சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 238 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, அன்று, தத்த, தந்த, சொல்லி, முருகனே, வீற்றிருக்கும், உள்ள, வென்ற, நின்று, விலையாக, வெட்சி, பெருமாளே