பாடல் 237 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான |
விரித்த பைங்குழ லொளிர்மல ரளிதன தனத்த னந்தன தனதன வெனவொலி விரிப்ப வண்கயல் விழியுறை குழையொடு ...... மலைபாய மிகுத்த வண்சிலை நுதல்மிசை திலதமொ டசைத்த பொன்குழை யழகெழ முகவொளி வெயிற்ப ரந்திட நகையிதழ் முருகலர் ...... வரிபோதத் தரித்த தந்திரி மறிபுய மிசைபல பணிக்கி லங்கிய பரிமள குவடிணை தனக்கொ ழுந்துகள் ததைபட கொடியிடை ...... படுசேலை தரித்து சுந்தர மெனஅடர் பரிபுர பதச்சி லம்பொடு நடமிடு கணிகையர் சழக்கர் விஞ்சையர் மயல்களின் முழுகுவ ...... தொழியாதோ உரித்த வெங்கய மறியொடு புலிகலை தரித்த சங்கரர் மதிநதி சடையினர் ஒருத்தி பங்கின ரவர்பணி குருபர ...... முருகோனே உவட்டி வந்திடு மவுணரொ டெழுகடல் குவட்டை யும்பொடி படசத முடிவுற வுழைத்த இந்திரர் பிரமனு மகிழ்வுற ...... விடும்வேலா வரித்த ரந்துள வணிதிரு மருவிய வுரத்த பங்கயர் மரகத மழகிய வணத்த ரம்பர முறவிடு கணையினர் ...... மருகோனே வனத்தில் வந்தொரு பழையவ னெனவொரு குறத்தி மென்புன மருவிய கிளிதனை மயக்கி மந்திர குருமலை தனிலமர் ...... பெருமாளே. |
விரிந்த செழுமை வாய்ந்த கூந்தலில் விளங்கும் மலர்களில் உள்ள வண்டுகள் தன தனத்த னந்தன தனதன இவ்வாறான ஒலிகளை விரித்து எழுப்ப, வளமை வாய்ந்த கயல் மீன்கள் போன்ற கண்கள் காதில் பொருந்திய குண்டலங்களோடு மோதி அலைச்சல் உற, மேம்பட்டு விளங்கும் வலிமை பொருந்திய வில்லைப் போன்ற நெற்றியின் மேல் அமைந்த பொட்டும், அசைவுறும் பொன் குண்டலங்களும் அழகு வீச, முகத்து ஒளியின் ஜோதி பரந்து விளங்க, பற்களோடும் இதழோடும் கூடிய வாசனை உள்ள (செங்குமுத) மலரை ஒத்த (வாயினின்றும்) இசைப் பாட்டுக்கள் எழ, ஏந்தியுள்ள தந்திகளுடன் கூடிய வீணை சார்ந்துள்ள தோள்களின் மேல் பலவிதமான ஆபரணங்கள் விளங்க, மணமுள்ள, மலைக்கு நிகரான மார்பகங்களின் மீது செழுமையுள்ள (வாசனைப்) பொடிகள் நெருங்கி பூசப்பட்டிருக்க, (வஞ்சிக்) கொடி போன்ற இடையில் புடைவையை அணிந்து, அழகியது என்று சொல்லும்படி பொருத்தமாயுள்ள சிலம்பு அணிந்த பாதக் கிண்கிணியுடன் நடனம் செய்யும் விலைமாதராகிய தீயவர்களின், வித்தைக்காரர்களின், மோக மயக்கங்களில் நான் முழுகி இருக்கும் பழக்கம் என்னை விட்டு விலகாதோ? உரித்த கொடிய யானை, மான், புலி (இவைகளின்) தோலைத் தரித்த சங்கரர், சந்திரன் கங்கை ஆறு (இவைகளைத் தரித்த) சடையை உடையவரும், ஒப்பற்ற (பார்வதியை) ஒரு பாகத்தில் கொண்டவருமான சிவபெருமான் வணங்கும் குருபரனே, முருகனே, வெறுப்புற்று வந்த அசுரர்களும், ஏழு கடல்களும், கிரவுஞ்ச மலையும் பொடியாகும்படி, நூறு (அசுவமேத யாகம்) முடியும்படி உழைத்த இந்திரரும் பிரமனும் மகிழ்ச்சி அடையச் செலுத்திய வேலாயுதனே, வண்டுகள் வரிசையாக மொய்க்கும் துளசி மாலை அணிந்தவரும், லக்ஷ்மி பொருந்திய மார்பில் தாமரை மலரை உடையவரும், மரகதப் பச்சையின் அழகிய நிறத்தினரும், கடல் மீது செலுத்திய (கோதண்ட) பாணத்தை உடையவரும் ஆகிய திருமாலின் மருகனே, (வள்ளி மலைக்) காட்டில் வந்து, ஒரு கிழவன் என வேடம் பூண்டு, ஒப்பற்ற குறத்தியின் அழகிய (தினைப்) புனத்திலிருந்த கிளி போன்ற வள்ளியை மயக்கியவனே, மந்திர உபதேசத் தலமாகிய சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 237 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனத்த, தரித்த, உடையவரும், தந்தன, பொருந்திய, விளங்க, கூடிய, மேல், ஒப்பற்ற, அழகிய, செலுத்திய, மீது, மலரை, விளங்கும், சங்கரர், உரித்த, னந்தன, மருவிய, மந்திர, உள்ள, வாய்ந்த, பெருமாளே, வண்டுகள்