பாடல் 226 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - ....; தாளம்
-
தனதன தானன, தனதன தானன தனதன தானன ...... தனதான |
பரவரி தாகிய வரையென நீடிய பணைமுலை மீதினி ...... லுருவான பணிகளு லாவிட இழையிடை சாய்தரு பயிலிகள் வாள்விழி ...... அயிலாலே நிரவரி யோடியல் குழல்களி னாண்மலர் நிரைதரு மூரலி ...... னகைமீது நிலவியல் சேர்முக மதிலுயர் மாமயல் நிலையெழ வேயலை ...... வதுவாமோ அரவணை யார்குழை பரசிவ ஆரண அரனிட பாகம ...... துறைசோதி அமையுமை டாகினி திரிபுரை நாரணி அழகிய மாதருள் ...... புதல்வோனே குரவணி பூஷண சரவண தேசிக குககரு ணாநிதி ...... அமரேசா குறமக ளானைமின் மருவிய பூரண குருகிரி மேவிய ...... பெருமாளே. |
வணங்கிப் போற்றுதற்கு அரியதான மலை என்னும்படி பரந்துள்ள பெரிய மார்பகங்களின் மேல் அலங்காரமான அணிகலன்கள் விளங்க, நூல் போன்ற இடை சாயும்படி நடை பழகுபவருடைய ஒளி விளங்கும் அம்பு போன்ற கண்கள் மீதும், விரைந்து வரும் வண்டுகளோடு கூடியுள்ள கூந்தல்களின் புது மலர் மீதும், வரிசையாய் விளங்கி புன்சிரிப்பைக் காட்டும் பற்கள் மீதும், சந்திரனைப் போன்ற முகத்தின் மீதும் எழுகின்ற அதிக மோகம், நிலை பெற்று என் மனத்தில் தோன்றுவதால் என் நெஞ்சம் அலைபாயலாமோ? பாம்பைப் பொருந்திய குண்டலமாக உடைய பரம சிவன், வேதம் போற்றும் அரன் (எனப்படும் பெருமானுடைய) இடப் பாகத்தில் உறைகின்ற ஜோதி, அம்மை, உமாவாகிய பார்வதி, தேவி, திரி புரத்தை எரித்தவள், துர்க்கை, அழகிய மாதாகிய பார்வதி அருளிய மகனே, குரா மலரை அணிகின்ற ஆபரணமாகக் கொண்டவனே, சரவணனே, குரு மூர்த்தியே, குகனே, கருணை நிதியே, தேவர்களுக்கு ஈசனே, குறப் பெண்ணாகிய வள்ளி, (ஐராவதம் என்ற) யானையால் வளர்க்கப்பட்ட மின்னல் போன்ற தேவயானை (ஆகிய இருவரும்) சேர்ந்துள்ள முழுப் பொருளே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* டாகினி, காகினி, லாகினி, ஹாகினி, ராகினி, சாகினி என்பன தேவியைக் குறிப்பனவாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 226 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - மீதும், தனதன, தானன, பார்வதி, அழகிய, டாகினி, பெருமாளே