பாடல் 218 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - சுநாத
விநோதினி, தாளம் - ஆதி - தேசாதி
தனதான தத்த தனதான தத்த தனதான தத்த ...... தனதான |
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த திருமாது கெர்ப்ப ...... முடலூறித் தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த ...... பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி ...... லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி ...... தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க ...... வருநீதா முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த ...... குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் ...... முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த ...... பெருமாளே. |
இந்த உலக மாயையில் சிக்குண்டு, எனது இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி அவளது உடலில் ஊறி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல வடிவோடு கூடி பூமியில் நன்கு தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்து, முகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடித்தலத்தில் அமர்ந்து குழந்தையாக விளையாடி, நாள்தோறும் உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும். முக வசீகரம் மிக்க குறப்பெண் வள்ளியின் மார்பினை அணைக்க வந்த நீதிபதியே*, பழம் பெரும் வேதத்தினுள் ஒப்பற்ற சிறந்த பொருளுக்குள்ளே பிரணவப் பொருளை சிவனாருக்கு உபதேசித்த குருநாதனே, தடையொன்றும் இல்லாது எனக்கு உனது திருவடிகளைத் தரிசனம் செய்வித்த ஒப்பற்ற திருவேரகத்தின் (சுவாமிமலையின்) முருகனே, மரங்கள் இருபுறமும் நிறைந்த காவிரி ஆற்றின் வடக்குப் பகுதியிலே போர் வேல் விளங்க நிற்கும் பெருமாளே.
* யான், எனது என்ற அகங்கார மமகாரம் அற்ற வள்ளியை தானே வலிய வந்து அணைத்து மணத்தல் தனக்கு நீதி என்ற காரணத்தால், நீதிபதியே என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 218 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதான, தத்த, எனது, ஒப்பற்ற, விளையாடி, வைத்த, பெருமாளே