பாடல் 217 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - மாயா மாளவ
கெளளை; தாளம் - சதுஸ்ர த்ருவம்
கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0
நடை தகிடதக
கண்ட நடை - 35, எடுப்பு /4/4/4 0
நடை தகிடதக
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன ...... தந்ததான |
சுத்தியந ரப்புடனெ லுப்புறுத சைக்குடலொ டப்புடனி ணச்சளிவ லிப்புடனி ரத்தகுகை சுக்கிலம் விளைப்புழுவொ டக்கையும ழுக்குமயிர் ...... சங்குமூளை துக்கம்விளை வித்தபிணை யற்கறைமு னைப்பெருகு குட்டமொடு விப்புருதி புற்றெழுதல் முட்டுவலி துச்சிபிள வைப்பொருமல் பித்தமொடு றக்கமிக ...... வங்கமூடே எத்தனைநி னைப்பையும்வி ளைப்பையும யக்கமுற லெத்தனைச லிப்பொடுக லிப்பையுமி டற்பெருமை எத்தனைக சத்தையும லத்தையும டைத்தகுடில் ...... பஞ்சபூதம் எத்தனைகு லுக்கையுமி னுக்கையும னக்கவலை யெத்தனைக வட்டையுந டக்கையுமு யிர்க்குழுமல் எத்தனைபி றப்பையுமி றப்பையுமெ டுத்துலகில் ...... மங்குவேனோ தத்தனத னத்தனத னத்தனவெ னத்திமிலை யொத்தமுர சத்துடியி டக்கைமுழ வுப்பறைகள் சத்தமறை யத்தொகுதி யொத்தசெனி ரத்தவெள ...... மண்டியோடச் சக்கிரிநெ ளிப்பஅவு ணப்பிணமி தப்பமரர் கைத்தலம்வி ரித்தரஹ ரச்சிவபி ழைத்தொமென சக்கிரகி ரிச்சுவர்கள் அக்கணமே பக்குவிட ...... வென்றவேலா சித்தமதி லெத்தனைசெ கத்தலம்வி தித்துடன ழித்துகம லத்தனைம ணிக்குடுமி பற்றிமலர் சித்திரக ரத்தலம்வ லிப்பபல குட்டிநட ...... னங்கொள்வேளே செட்டிவடி வைக்கொடுதி னைப்புனம திற்சிறுகு றப்பெணம ளிக்குள்மகிழ் செட்டிகுரு வெற்பிலுறை சிற்பரம ருக்கொருகு ருக்களென முத்தர்புகழ் ...... தம்பிரானே. |
சுற்றப்பட்டுள்ள நரம்புகளுடன் எலும்பு பொருந்திய மாமிசம், குடல் இவற்றுடன், நீர், கொழுப்பு, (மூக்குச்) சளி, இழுப்பு நோய், இருதயம், இந்திரியம், விளைகின்ற கிருமிகள், எலும்புகள், அழுக்குகள், ரோமம், சங்கு போல் வெளுத்த மூளை, துக்கத்தை விளைவிக்கின்ற சேர்க்கை நோய், மாதவிடாய் முதலிய மாசு, அவயவ நுனிகளில் விருத்தியாகும் குஷ்ட நோய், சிலந்தி, புண் புரை வைத்தல், முட்டு வலி, புசிக்கின்ற ராஜப் புண், வயிறு உப்பும் நோய், பித்தம், தூக்கம் மிகுந்து வர, உடலில் எத்தனை எண்ணங்கள், செய்கைகள், மயக்கங்கள், எத்தனை வெறுப்பும், பொலிவும், வலிமைப் பெருமையும், எத்தனை க்ஷய நோய், மலத்தையும் அடைத்துள்ள ஐந்து பூதத்தாலாகிய உடலிலே, எத்தனை குலுக்கு, எத்தனை மினுக்கு, மனக் கவலை, எத்தனை கபடம், நடவடிக்கை, உயிரின் சேர்க்கை, எத்தனை பிறவிகளையும், மரணங்களையும் எடுத்து (நான்) இவ்வுலகில் வாட்டமுற்று அழிவேனோ? தத்தனத னத்தனத னத்தன என்று பறைகள் ஒலிக்கவும், ஒரு வகைப் பறை, உடுக்கை, இடக் கையால் கொட்டும் தோல் கருவிகள் பேரொலி செய்யவும், கூட்டமாய் வருவதை ஒத்துத் தோன்றிய இரத்த வெள்ளம் நெருங்கி ஓடவும், ஆதிசேஷனாகிய பாம்பு நெளியவும், அசுர்களின் பிணங்கள் (ரத்த வெள்ளத்தில்) மிதக்கவும், தேவர்கள் கைகளைத் தூக்கி, அரஹர சிவ, பிழைத்தோம் என்று முழங்கவும், சக்ரவாளகிரியின் சுவர்கள் அந்தக் கணத்திலேயே பிளவுபடவும், வெற்றி கொண்ட வேலனே, உனது திருவுள்ளத்தில், எத்தனை உலகங்களைப் படைத்து, உடனே அழித்து, தாமரையில் வீற்றிருக்கும் பிரமனின் அழகிய குடுமியைப் பிடித்து (உனது) அழகிய திருக்கரம் வருந்த பல முறை அவனைக் குட்டி நடனம் கொண்ட தலைவனே, செட்டி வேடம் பூண்டு, தினைப்புனத்தில் (வாழும்) சிறிய குறப் பெண்ணாகிய வள்ளியின் படுக்கையில் மகிழும் செட்டியே, சுவாமி மலையில் வீற்றிருக்கும் ஞானமயமான சிவ பெருமானுக்கு ஒப்பற்ற குருமூர்த்தி என்று முக்தி நிலை பெற்ற பெரியோர் புகழ்கின்ற தம்பிரானே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 217 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, எத்தனை, நோய், கொண்ட, உனது, அழகிய, வீற்றிருக்கும், சேர்க்கை, தத்தனத, னத்தனத, தம்பிரானே, புண்