பாடல் 208 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - மோஹனம்;
தாளம் - திஸ்ர்ருபகம் - 5
தனாதனன தானம் தனாதனன தானம் தனாதனன தானம் ...... தனதான |
கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் ...... சமனாருங் கடாவிவிடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் ...... கதைபோலும் இடாதுபல தேடுங் கிராதர்பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் ...... கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் ...... படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் ...... பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் ...... கெறிவோனே தொடாதுநெடு தூரந் தடாதுமிக வோடுஞ் சுவாசமது தானைம் ...... புலனோடுஞ் சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் ...... பெருமாளே. |
எருமைக்கடா வாகனத்தின் மேல் தனது வீரம் குன்றாமல் விரும்பி ஏறும், கடாவைப் போன்ற முரட்டு யமனும் கட்டளை இட்டு ஏவிவிட்ட யமதூதன் தவறாமல் சரியான வழியில் வந்து உயிரைப் பற்றுதல் போலும், கனவில் தோன்றிய விளையாட்டு விழித்தால் மறப்பது போலும், கொடுக்காமல் பலப்பல தேடும் கொடியவர் பொருள் போலும், இவ்வுலகில் நிலைத்து நிற்காதவண்ணம் உயிர் பறி போகிற சுகம்தான் இந்த வாழ்க்கையென்று உணர்ந்து, காலையும் மாலையும் மற்றும் எப்போதும் நல்வார்த்தைகளால் இன்று அடியேனும் உன்னைத் துதிக்க கண்பார்த்தருள்வாய். எந்நாளும் விடாமல் நடனத்தை காளியுடன் ஆடுகின்ற நாட்டிய இலக்கண நிபுணனாம் சிவபெருமான் பெற்ற பெரும் செல்வமே, மாறுபட்ட குணமுடைய சூரனின் பகட்டான வாழ்வும் உயிரும் அழியும்படியாக அவ்விடத்தில் வேலாயுதத்தை விடுத்தவனே, தொட முடியாத காற்றாகவும், நெடுந்தூரம் தடைபடாமல் விடாமல் ஓடுகின்றதுமான பிராணவாயுவையும், ஐந்து புலன்களையும் நன்றாக யோகமுறையால் உள்ளே அடக்கவல்ல ஞானத் தவசிகள் கூடுகின்ற சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 208 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனாதனன, தானம், போலும், விடாமல், வாழ்வும், பெருமாளே