பாடல் 207 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - சக்ரவாஹம்;
தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2
தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் தனதனன தனதனன தான தந்தனம் ...... தனதான |
ஒருவரையு மொருவரறி யாம லுந்திரிந் திருவினையி னிடர்கலியொ டாடி நொந்துநொந் துலையிலிடு மெழுகதென வாடி முன்செய்வஞ் ...... சனையாலே ஒளிபெறவெ யெழுபுமர பாவை துன்றிடுங் கயிறுவித மெனமருவி யாடி விண்பறிந் தொளிருமின லுருவதென வோடி யங்கம்வெந் ...... திடுவேனைக் கருதியொரு பரமபொரு ளீது என்றுஎன் செவியிணையி னருளியுரு வாகி வந்தஎன் கருவினையொ டருமலமு நீறு கண்டுதண் ...... டருமாமென் கருணைபொழி கமலமுக மாறு மிந்துளந் தொடைமகுட முடியுமொளிர் நூபு ரஞ்சரண் கலகலென மயிலின்மிசை யேறி வந்துகந் ...... தெனையாள்வாய் திரிபுரமு மதனுடலு நீறு கண்டவன் தருணமழ விடையனட ராஜ னெங்கணுந் திகழருண கிரிசொருப னாதி யந்தமங் ...... கறியாத சிவயநம நமசிவய கார ணன்சுரந் தமுதமதை யருளியெமை யாளு மெந்தைதன் திருவுருவின் மகிழெனது தாய்ப யந்திடும் ...... புதல்வோனே குருகுகொடி யுடன்மயிலி லேறி மந்தரம் புவனகிரி சுழலமறை யாயி ரங்களுங் குமரகுரு வெனவலிய சேட னஞ்சவந் ...... திடுவோனே குறமகளி னிடைதுவள பாத செஞ்சிலம் பொலியவொரு சசிமகளொ டேக லந்துதிண் குருமலையின் மருவுகுரு நாத வும்பர்தம் ...... பெருமாளே. |
ஒருவர் போவது ஒருவருக்குத் தெரியாதவண்ணம் (பொது மகளிர் வீட்டைத் தேடித்) திரிந்து, நல்வினை தீவினை என்னும் இரு வினை காரணமாய்த் துன்பமும் கலக்கமும் அடைந்து, மனம் வேதனைப்பட்டு, தீ அடுப்பில் இட்ட மெழுகுபோல வாட்டமுற்று, முற்பிறப்பில் செய்த வஞ்சனைகளின் பயனாக, பெருமையுடன் விளங்கி எழுந்து (பொம்மலாட்டத்தில்) மரப் பாவையைக் கட்டியிருக்கும் கயிற்றின் இழுப்பிற்குத் தக்க பல ஆட்டங்களை ஆடி, வானத்தில் வெளிப்பட்டு ஒளி வீசும் மின்னலின் உருவுபோல வெட்டென ஓடி உடல் வெந்து போய் மறைகின்ற என்னையும், அடியாருள் ஒருவனாக எண்ணி, ஒப்பற்ற பரம் பொருள் இதுதான் என்று என்னுடைய இரண்டு காதுகளிலும் உபதேசித்து அருள் செய்து, இம்மனித உருவில் கொண்டுவந்துள்ள என் பிறப்பு வினையையும் அரிதான மும்மலங்களையும் பொடியாக்கி, குளிர்ச்சியைத் தருவதும், பெருமையும் மென்மையும் கொண்டு கருணையைப் பொழிகின்றதுமான தாமரை மலர் போன்ற ஆறு முகங்களும், கடப்ப மாலையும், இரத்தின மணி மகுடங்களும், ஒளி பொருந்திய பாதங்களில் அணிந்துள்ள சிலம்புகள் கலகல என்று ஒலிக்க, மயிலின் மேல் ஏறி வந்து, மகிழ்வுடன் என்னை ஆண்டருள்க. முப்புரங்களையும், மன்மதனுடைய உடலையும் எரித்துச் சாம்பலாக்கியவரும், மிகவும் இளமை வாய்ந்த ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவரும், (சிதம்பரத்தில் பொற்சபையில்) ஆனந்தத் தாண்டவம் புரிந்த நடராஜரும், அங்கிங்கு எனாதபடி எங்கும் விளங்கி, ஒளி வீசும் சிவந்த மலை உருவம் கொண்டவரும், முதலும் முடிவும் அந்த அருண கிரியில் மாலும் பிரமனும் அறிய முடியாத சிவாயநம என்னும் ஐந்தெழுத்தின் மூல காரணப் பொருளானவரும், (அந்த மந்திரத்தைச் சொன்னால்) ஊறும் ஞான அமுதத்தைத் தந்தருளி நம்மை ஆண்டவருமான எந்தை சிவபெருமானது திரு உருவின் இடது பாகத்தில் இருந்து மகிழும் என் தாயாகிய உமா தேவி அருளிய மகனே, சேவற் கொடியுடன் மயிலின் மீது ஏறி, மந்தர மலை முதலாக உலகின் எல்லா மலைகளும் சுழலவும், எண்ணிலா வேதங்களும் குமர குரு என்று ஒலிக்கவும், வலிமை பொருந்திய ஆதி சேஷன் பயப்படும்படியாகவும் வலம் வருபவனே, வள்ளிநாயகியின் இடை துவளவும், பாதங்களில் அணிந்த செம்மை வாய்ந்த சிலம்புகள் சப்தம் செய்ய, ஒப்பற்ற இந்திராணியின் மகளான தேவயானையோடு கலந்து, வலிமையுள்ள சுவாமிமலையில் வீற்றிருக்கும் குருநாதனே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 207 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்தனம், சிலம்புகள், பாதங்களில், மயிலின், கொண்டவரும், அந்த, பொருந்திய, வாய்ந்த, வீசும், பெருமாளே, நீறு, என்னும், விளங்கி, தகதகிட, ஒப்பற்ற