பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - அடாணா; தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன தந்தத் தனதன தனதன தனதன ...... தனதான |
எந்தத் திகையினு மலையினு முவரியி னெந்தப் படியினு முகடினு முளபல எந்தச் சடலமு முயிரியை பிறவியி ...... னுழலாதே இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு என்சித் தமுமன முருகிநல் சுருதியின் ...... முறையோடே சந்தித் தரஹர சிவசிவ சரணென கும்பிட் டிணையடி யவையென தலைமிசை தங்கப் புளகித மெழஇரு விழிபுனல் ...... குதிபாயச் சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு னந்தத் திருநட மிடுசர ணழகுற சந்தச் சபைதனி லெனதுள முருகவும் ...... வருவாயே தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம துங்கத் திசைமலை யுவரியு மறுகச ...... லரிபேரி துன்றச் சிலைமணி கலகல கலினென சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு ...... மயில்வேலா கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத கந்தப் பரிமள தனகிரி யுமையரு ...... ளிளையோனே கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள் அம்பொற் கொடியிடை புணரரி மருகநல் கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய ...... பெருமாளே. |
எந்தத் திசையிலும், மலையிலும், கடலின் கரையில் உள்ள எந்தப் பூமியிலும், வீட்டுக் கூரையிலும், வசிக்கும் பலவகையான எந்த உயிரோடு சார்ந்த பிறப்புக்களிலும் நான் மீண்டும் உழன்று திரியாமல், இந்த உடலில் இருக்கும்பொழுதே என் உயிர் நிலைபெறுவதற்காக, தாமரை போன்ற அழகிய உனது திருவடிகளில் மணமுள்ள மலர் கொண்டு, என் சித்தமும், மனமும் உருகி சிறந்த வேதங்களில் சொல்லப்பட்ட முறைப்படி உன்னைச் சந்தித்து, ஹரஹர, சிவசிவ, சரணம் என்று நான் கும்பிட்டு, உன் இணை அடிகள் என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகாங்கிதம் அடைய, என் இரு கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் அருவி போல் குதித்துப் பாய, மின்னற் கொடி போன்ற இடையுடைய தேவதையாம் தேவயானையின் அழகு முன்னே விளங்க, திரு நடனம் இடும் உன் திருவடிகள் அழகுடன் பொலிய, இந்த அழகான சபையில் எனது உள்ளம் உருகுமாறு வந்தருள்வாயாக. தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி தந்தத் தனதன டுடுடுடு டமடம என்ற தாளத்துக்கு உயர்ந்த திசைகளும், மலைகளும், கடல்களும் கலங்கும்படியாக சல்லரியும் (ஜாலரா), பேரி என்ற கொட்டும் நெருங்கி ஒலிக்க, முழங்கும் மணி கலகல கலினென சப்திக்க, தேவர்கள் மலர் மாரி பொழிய, பிரமன் வேதம் ஓதிப் புகழ, அசுரர்கள் துன்பம் அடைந்து யமன் உலகை அடையுமாறு செலுத்திய கூரிய வேலாயுதனே, வாசமிக்க ஜடாமுடியையும், நெருப்புப் போன்ற நிறமுள்ள உருவத்தையும், வெற்றியையும் கொண்ட எம் தந்தையாம் சிவபிரானுக்கு உயிர் போன்ற மலைமகள், மரகதப் பச்சை வடிவழகி, சந்தன மணம் வீசு மார்பினை உடையவளாகிய உமாதேவி அருளிய இளையவனே, தாமரை மலர்ப் பீடத்தில் ஏறி அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடி போன்ற இடையை உடைய லக்ஷ்மி தேவியை மணந்துள்ள திருமாலின் மருகனே, நறுமணம் வீசும் சோலைகள் விளங்கும் குருமலை என்ற சுவாமிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தந்தத், குலமகள், திருமகள், குருமலை, மலைமகள், பெருமாளே, கந்தப், உயிர், மலர், அழகிய, தாமரை, கலினென, நான், டமடம, கொடியிடை, தலைமிசை, சிவசிவ, எந்தத், தொந்தத், திகுகுட, தகதிமி, டுடுடுடு, டிமிடிமி, தகுகுட, கலகல