பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் - அடாணா; தாளம்
- அங்கதாளம் - 5 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தகதிமி-2, தகதிமி-2, தகிட-1 1/2
தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான ...... தனதான |
இருவினை புனைந்து ஞான விழிமுனை திறந்து நோயி னிருவினை யிடைந்து போக ...... மலமூட விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து பேத மிலையென இரண்டு பேரு ...... மழகான பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவிண் மடந்தை பாத ...... மலர்தூவப் பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன்கு லாவி ...... வரவேணும் அரியய னறிந்தி டாத அடியிணை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு ...... நடராஜன் அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம் அயலணி சிவன்பு ராரி ...... யருள்சேயே மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை ...... யுடையோனே வளைகுல மலங்கு காவி ரியின்வட புறஞ்சு வாமி மலைமிசை விளங்கு தேவர் ...... பெருமாளே. |
அடியேன் அரும் பெரும் செயலாகிய சிவ யோகத்தை மேற்கொண்டு, அறிவுக் கண்ணாகும் நெற்றியிலுள்ள சுழிமுனை திறக்கப் பெற்று, பிறவிப் பிணிக்குக் காரணமான நல்வினை, தீவினை இரண்டும் பிரிந்து ஓடிப்போகவும், ஆணவ மலமாகிய இருள் தேய்ந்து அதனால் மெய்ஞ்ஞான ஒளி வீசவும், உன் ஆறு திருமுகங்களின் அருட்பெருக்கில் கலப்புற்று, பரமாத்மாவாகிய நீயும் ஜீவாத்மாவாகிய நானும் இரண்டறக் கலந்து ஒன்றாகி, அழகிய வாசமிக்க மலரும் அதன் நறுமணமும் போல ஒன்றி பேரின்பமுற்று, தேவர்கள் வணங்கவும், தேவலோக மங்கையர் திருவடிகளில் மலர் தூவவும், மிக்க அன்போடு எண்ணிலாத பல்கோடி முநிவர்கள் புகழ்ந்து பாடவும், பெரிய மயில் வாகனத்தில் ஏறி உல்லாசமுடன் நீ வரவேண்டும். நாராயணனும் பிரமனும் தேடித் தேடிக் காண முடியாத திருவடிகளாம் செந்நிறம் பொருந்திய பாதங்களே உலகங்களுக்கு முதன்மையானவை என்று அருட்பெரும் ஜோதியாக ஆனந்தத் தாண்டவம் புரியும் நடராஜப் பெருமானும், நெருப்பில் இட்டு மிக ஒளிரும் இரும்பைப் போன்ற செம்மேனியைக் கண்டு மகிழ்ச்சி அடையும் மரகதமேனிப் பார்வதியை அருகில் அமர்த்திய சிவனுமாகிய திரிபுராந்தகன் பெற்றருளிய திருப் புதல்வனே, பகைவராகிய அசுரர்களின் வலிமையான, அலங்கார ஆரமணிந்த தலைகள், உடல்கள் அச்சத்தில் நடுங்க, அவர்களது உயிரை யமன் உண்ண, வெற்றி பெற்ற வேலை உடையவனே, சங்குக் கூட்டங்கள் ஒளி வீசும் காவிரி நதியின் வடபுறத்தில் சுவாமிமலை என்ற திருவேரகத்தில் விளங்கும், தேவர்களுக்கெல்லாம் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 205 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, தனந்த, நடுங்க, வேலை, பெருமாளே, புகழ்ந்து, தேவர், விளங்கி, கலந்து, தகதிமி, முநிவர்கள்