பாடல் 202 - சுவாமி மலை - திருப்புகழ்

ராகம் -
நாட்டகுறிஞ்சி ; தாளம் - அங்கதாளம் - 8 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தக, தகிட-1 1/2, தகதிமி-2
தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன தானான தனதனத் தான தனதன ...... தந்ததான |
ஆனாத பிருதிவிப் பாச நிகளமும் மாமாய விருளுமற் றேகி பவமென வாகாச பரமசிற் சோதி பரையைய ...... டைந்துளாமே ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம் யோகீச ரெவருமெட் டாத பரதுரி யாதீத மகளமெப் போது முதயம ...... நந்தமோகம் வானாதி சகலவிஸ்த் தார விபவரம் லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன் மாலீச ரெனுமவற் கேது விபுலம ...... சங்கையால்நீள் மாளாத தனிசமுற் றாய தரியநி ராதார முலைவில்சற் சோதி நிருபமு மாறாத சுகவெளத் தாணு வுடனினி ...... தென்றுசேர்வேன் நானாவி தகருவிச் சேனை வகைவகை சூழ்போது பிரபலச் சூரர் கொடுநெடு நாவாய்செல் கடலடைத் தேறி நிலைமையி ...... லங்கைசாய நாலாறு மணிமுடிப் பாவி தனையடு சீராமன் மருகமைக் காவில் பரிமள நாவீசு வயலியக் கீசர் குமரக ...... டம்பவேலா கானாளு மெயினர்தற் சாதி வளர்குற மானொடு மகிழ்கருத் தாகி மருடரு காதாடு முனதுகட் பாண மெனதுடை ...... நெஞ்சுபாய்தல் காணாது மமதைவிட் டாவி யுயவருள் பாராயெ னுரைவெகுப் ப்¡£தி யிளையவ காவேரி வடகரைச் சாமி மலையுறை ...... தம்பிரானே. |
நீங்குதற்கு அரிய மண்ணாசை என்ற விலங்கும், பெரும் மயக்கத்தைத் தரும் ஆணவம் என்ற இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட தன்மை என்று கூறும்படியாக, வானம் போல் பரந்த பெரிய ஞான ஜோதியான பராசக்தியை அடைந்து நினைப்பு எதுவும் இன்றி, முப்பத்தாறு மேலான தத்துவங்களுக்கு* அப்பால் முதன்மையானதாய், என்றும் யோகீசர் எவர்க்கும் எட்டாததான பெரிய துரிய** நிலைக்கும் மேம்பட்டதாய், உருவம் இல்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய், வான் முதலிய எல்லாமாய் விரிவான உயிர்ப்பொருளாய், உலகத்தின் முதலாகவும் முடிவாகவும் விளங்குவதாய், உண்மை அறிவாய், தாமரையான் பிரமன், திருமால், சிவபிரான் என்ற மும்மூர்த்திகளுக்கும் மூலகாரணமாக விளங்கும் பெருமை வாய்ந்ததாய், சந்தேகம் இன்றி நீடூழிகாலம் இறப்பின்றி தானே மெய்த்தன்மைத்தாக இருப்பதாய், அரியதாய், மற்ற ஒன்றையும் சாராததாய், அழிவின்றி சத்திய ஜோதியாகத் துலங்குவதாய், உருவம் ஏதும் இல்லாததாய், மாறுதல் இல்லாது விளங்கும் இன்ப வெள்ளமான சிவத்துடன் யான் இனிமையாக என்றைக்கு இணைவேன்? பல்விதமான ஆயுதங்கள் (கத்தி, வில், வாள் முதலியவை) தாங்கிய சேனைகள் விதவிதமாக சூழ்ந்து வர, பிரசித்தி பெற்ற வீரர்களுடன், பெரும் கப்பல்கள் செல்லும் சமுத்திரத்தை அணைகட்டிக் கடந்து, அக்கரை சென்று, நிலைத்திருந்த இலங்கையை வீழ்த்தி, பத்து மணிமுடிகளைத் தரித்த பாவியாகிய ராவணனை வதைத்த ஸ்ரீராமனின் மருகனே, இருண்ட சோலைகளில் நறுமணம் நன்றாக வீசும் வயலூரில் வீற்றுள்ள அக்னீஸ்வரருடைய*** குமாரனே, கடப்பமலர் அணிந்தவனே, வேலாயுதனே, காட்டை ஆளும் வேட்டுவர் குலத்திலே வளர்ந்த குறமானாகிய வள்ளியோடு மகிழ்வதற்கு எண்ணம் கொண்டு, மருட்சியைத் தருகின்றதும், காதுவரை நீண்டதுமான உனது கண்களிலிருந்து வரும் பாணமானது என்னுடைய நெஞ்சினில் பாய்வதை நீகாணாமல் இருக்கின்றாய், உன் செருக்கை விடுத்து என்னுயிர் உய்ய அருள்வாயாக என்றெல்லாம் வள்ளியிடம் உரைத்து மிக்க அன்புடன் சேர்ந்த இளையவனே, காவேரியின் வடகரையினுள்ள சுவாமிமலைத் தலத்தில் எழுந்தருளிய தனிப் பெரும் தலைவனே.
* 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.
** துரியம் என்பது ஜாக்கிரம், சுழுத்தி, சொப்பனம் ஆகிய மூன்று நிலைகட்கும் அப்பால் உள்ள நிலை.
*** வயலூரில் உள்ள சிவமூர்த்திக்குப் பெயர் அக்னீஸ்வரர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 202 - சுவாமி மலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்துவம், தனதன, பெரும், தானான, தனதனத், வயலூரில், விளங்கும், தத்துவங்கள், புறநிலை, உள்ள, வாய்ந்ததாய், அப்பால், பெரிய, சோதி, இன்றி, தகிட, உருவம், இல்லாததாய்