பாடல் 200 - பழநி - திருப்புகழ்

ராகம் - வராளி; தாளம் -
மிஸ்ர சாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன தான தந்தன ...... தனதான |
வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய மாதர் கொங்கையி லேமு யங்கிட வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான் வீறு கொண்டுட னேவ ருந்தியு மேயு லைந்தவ மேதி ரிந்துள மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம் போய லைந்துழ லாகி நொந்துபின் வாடி நைந்தென தாவி வெம்பியெ பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப் போது கங்கையி னீர்சொ ரிந்திரு பாத பங்கய மேவ ணங்கியெ பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே தீயி சைந்தெழ வேயி லங்கையில் ராவ ணன்சிர மேய ரிந்தவர் சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே தேச மெங்கணு மேபு ரந்திடு சூர்ம டிந்திட வேலின் வென்றவ தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே ஆயி சுந்தரி நீலி பிங்கலை போக அந்தரி சூலி குண்டலி ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும் ஆல முண்டர னாரி றைஞ்சவொர் போத கந்தனை யேயு கந்தருள் ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே. |
மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி, வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல் செருக்கு அடைந்து மனம் வருந்தியும், நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும், அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும், பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும், இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும், மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக. நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில் இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக வென்ற இராமனின் மருகோனே, எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே, தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே, அனைவருக்கும் தாய், அழகி., பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள், உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி, ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும், ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட, ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே), திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 200 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, பெருமாளே, நிலை, அருள், செய்ய, கொண்ட, வேயி, மருகோனே