பாடல் 199 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனன தந்த தனதனன தனன தந்த தனதனன தனன தந்த ...... தனதான |
விரைமருவு மலர ணிந்த கரியபுரி குழல்ச ரிந்து விழவதன மதிவி ளங்க ...... அதிமோக விழிபுரள முலைகு லுங்க மொழிகுழற அணைபு குந்து விரகமயல் புரியு மின்ப ...... மடவார்பால் இரவுபக லணுகி நெஞ்ச மறிவழிய வுருகு மந்த இருளகல வுனது தண்டை ...... யணிபாதம் எனதுதலை மிசைய ணிந்து அழுதழுது னருள்வி ரும்பி யினியபுகழ் தனைவி ளம்ப ...... அருள்தாராய் அரவில்விழி துயில்மு குந்த னலர்கமல மலர்ம டந்தை அழகினொடு தழுவு கொண்டல் ...... மருகோனே அடலசுர ருடல்பி ளந்து நிணமதனில் முழுகி யண்ட அமரர்சிறை விடுப்ர சண்ட ...... வடிவேலா பரவைவரு விடம ருந்து மிடறுடைய கடவுள் கங்கை படர்சடையர் விடைய ரன்ப ...... ருளமேவும் பரமரரு ளியக டம்ப முருகஅறு முகவ கந்த பழநிமலை தனில மர்ந்த ...... பெருமாளே. |
மணம் கமழும் பூக்களை அணிந்த, கரிய சுருண்ட கூந்தல் சரிந்து விழ, சந்திரனைப் போன்று முகம் விளங்க, அதிக காம மயக்கம் தர வல்ல கண்கள் புரள, மார்பகங்கள் குலுங்க, பேச்சு குழற, படுக்கையில் புகுந்து காம மோகச் செயல்களைச் செய்யும் இன்ப வேசையரிடத்து இரவும் பகலும் நெருங்கிச் சென்று, மனமும் அறிவும் அழிந்து, உருகும் அந்த அஞ்ஞானம் நீங்க, உனது தண்டைகள் அணிந்த திருவடியை எனது தலை மீது தரித்து, நான் மேலும் மேலும் அழுது உன் திருவருளையே விரும்பி, இனிமையான உனது திருப்புகழைச் சொல்ல அருள் வாக்கு தந்து அருளுக. பாம்பின் மீது கண் துயிலும் முகுந்தன், மலர்ந்த தாமரை மலரில் வீற்றிருக்கும் அழகிய லக்ஷ்மியோடு தழுவும் கருமேக நிறத்தினராகிய திருமாலின் மருகனே, வலிமையான அசுரர்களின் உடல்களைப் பிளந்து, அவ்வுடல்களின் ரத்தக் கொழுப்பில் முழுகி, விண்ணுலகத்துத் தேவர்களின் சிறையை ஒழித்த வீரப்ரதாபம் வாய்ந்த கூரிய வேலனே. பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட (நீல) கண்டத்தை உடைய கடவுள், கங்கை படர்ந்த சடையை உடையவர், ரிஷப வாகனத்தர், அன்பர்கள் உள்ளத்தில் வீற்றிருக்கும் பரம சிவனார் அருளிய கடம்பனே, முருகனே, ஆறு திருமுகங்களை உடையவனே, கந்தனே, பழனி மலையில் அமர்ந்தருளும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 199 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, தந்த, மீது, வீற்றிருக்கும், உனது, மேலும், பெருமாளே, முழுகி, கடவுள், கங்கை, அணிந்த