பாடல் 191 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
முருகு செறிகுழல் முகிலென நகில்நறு முளரி முகையென இயலென மயிலென முறுவல் தளவென நடைமட வனமென ...... இருபார்வை முளரி மடலென இடைதுடி யதுவென அதர மிலவென அடியிணை மலரென மொழியு மமுதென முகமெழில் மதியென ...... மடமாதர் உருவ மினையன எனவரு முருவக வுரைசெய் தவர்தரு கலவியி னிலவிய வுலையின் மெழுகென வுருகிய கசடனை ...... யொழியாமல் உவகை தருகலை பலவுணர் பிறவியி னுவரி தனிலுறு மவலனை யசடனை உனது பரிபுர கழலிணை பெறஅருள் ...... புரிவாயே அரவ மலிகடல் விடமமு துடனெழ அரிய யனுநரை யிபன்முத லனைவரும் அபய மிகவென அதையயி லிமையவ ...... னருள்பாலா அமர்செய் நிசிசர ருடலவை துணிபட அவனி யிடிபட அலைகடல் பொடிபட அமரர் சிறைவிட அடலயில் நொடியினில் ...... விடுவோனே பரவு புனமிசை யுறைதரு குறமகள் பணைகொ ளணிமுலை முழுகுப னிருபுய பணில சரவணை தனில்முள ரியின்வரு ...... முருகோனே பரம குருபர எனுமுரை பரசொடு பரவி யடியவர் துதிசெய மதிதவழ் பழநி மலைதனி லினிதுறை யமரர்கள் ...... பெருமாளே. |
வாசனை மிகுந்த கூந்தல் மேகம் எனவும், மார்பகங்கள் நறுமணமுள்ள தாமரை எனவும், சாயல் மயில் எனவும், பற்கள் முல்லை எனவும், நடை மடப்பம் பொருந்திய அன்னத்தின் நடை எனவும், இரண்டு கண்களும் தாமரை இதழ்கள் எனவும், இடை உடுக்கையே எனவும், வாய் இதழ் இலவ மலர் எனவும், இரண்டு அடிகளும் மலர் எனவும், பேச்சு அமுதம் எனவும், முகம் அழகிய சந்திரன் எனவும், அழகிய (விலை) மாதர்களின் உருவங்களை இவை இவை என்று உருவகப் படுத்திப் புகழ்ந்து, அவர்கள் கொடுக்கும் புணர்ச்சி இன்பத்தில் பொருந்த, உலையில் இடப்பட்ட மெழுகைப் போல் உருகிய குற்றவாளியாகிய என்னை எப்போதும் இன்பம் தரும் பல விதமான கலைகளையும் உணருதற்கு, பிறவிக் கடலில் கிடக்கும் இந்தக் கீழானவனுக்கு, மூடனுக்கு உனது சிலம்பணிந்த திருவடி இணைகளை பெறுவதற்கு அருள் புரிவாயாக. ஒலி மிகுந்த கடலில் அமுதத்துடன் விஷமும் தோன்ற, திருமாலும், பிரமனும், (ஐராவதம் என்ற) வெள்ளை யானையை உடைய இந்திரன் முதலான எல்லாரும் அடைக்கலம் என மிகவும் ஓலமிட, அந்த விஷத்தை உண்ட கயிலை மலை தேவனாகிய சிவபெருமான் அருளிய குழந்தையே. போர் செய்த அசுரர்களின் உடல்கள் துணிக்கப்பட்டு விழ, பூமி இடியுண்ண, அலை கடல் பொடிபட, தேவர்கள் சிறையினின்று மீள, சக்தி வேலை ஒரு நொடிப் பொழுதில் செலுத்தியவனே, போற்றிச் சென்ற தினைப்புனத்தின் மீது இருந்த குறப் பெண்ணாகிய வள்ளியின் பருத்த, அழகிய மார்பகங்களில் முழுகிய பன்னிரண்டு தோளனே, சங்குகள் விளையும் சரவண மடுவில் தாமரையில் எழுந்தருளிய முருகனே, மேலானவனே குருபரனே என்னும் புகழ் மொழிகளால் போற்றி செய்து வணங்கி அடியார்கள் துதிக்க, திங்கள் தவழும் பழனி மலையில் இனிதாக உறைகின்றவனே, தேவர்கள் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 191 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - எனவும், தனதன, அழகிய, மலர், கடலில், தேவர்கள், இரண்டு, தாமரை, பொடிபட, பெருமாளே, மிகுந்த, முளரி, உனது