பாடல் 190 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான |
முருகுசெறி குழலவிழ முலைபுளக மெழநிலவு முறுவல்தர விரகமெழ ...... அநுராகம் முதிரவச மறவிதரி யெழுகைவளை கலகலென முகநிலவு குறுவெயர்வு ...... துளிவீச அருமதுர மொழிபதற இதழமுது பருகிமிக அகமகிழ இருகயல்கள் ...... குழையேற அமளிபடு மமளிமல ரணையின்மிசை துயிலுகினும் அலர்கமல மலரடியை ...... மறவேனே நிருதனொடு வருபரியு மடுகரியும் ரதநிரையும் நெறுநெறன முறியவிடும் ...... வடிவேலா நிகழகள சகளகுரு நிருபகுரு பரகுமர நெடியநெடு ககனமுக ...... டுறைவோனே வருமருவி நவமணிகள் மலர்கமுகின் மிசைசிதற மதுவினிரை பெருகுவளி ...... மலைமீதே வளர்குறவர் சிறுமியிரு வளர்தனமு மிருபுயமு மருவிமகிழ் பழநிவரு ...... பெருமாளே. |
மணம் நிறைந்த கூந்தல் அவிழவும், மார்பகங்கள் புளகாங்கிதம் கொள்ள, நிலவின் ஒளியை பற்கள் வீச, காம உணர்ச்சி உண்டாக, ஆசை வளர்ந்து பெருக, தன்வசம் அழிய, அசைந்து நிலை பெயரும் கை வளையல்கள் கலகல் என்று ஒலிக்க, முகமாகிய சந்திரன் சிறு வியர்வைத் துளிகளை வீச, அருமையான இனிய சொற்கள் பதற்றத்துடன் வர, வாயிதழினின்று வரும் ஊறலாகிய அமுதத்தை உண்டு மிகவும் உள்ளம் களிப்பு அடைய, இரு கயல் மீன் போன்ற கண்கள் காதளவும் பாய, அமர்க்களப் படும் படுக்கை மலர் அணையில் மேல் நான் துயில் கொண்டாலும், விரிந்த உனது தாமரைத் திருவடிகளை மறவேன். அசுரர்களோடு வந்த குதிரைகளும், கொல்லும் தன்மை கொண்ட யானைகளும், தேர் வரிசைகளும் நெறு நெறு என முறிந்து விழவும் செய்த கூரிய வேலாயுதனே, அமைந்துள்ள அருவமாகியும் உருவமாகியும் உள்ள குருராஜனே, குருபரனே, குமரனே, நீண்ட பெரிய வானத்து உச்சியில் உறைபவனே, வரும் அருவிகளில் நவ மணிகளும் மலர்களும் கமுக மரத்தின் மேல் சிதற தேன் ஒழுக்கம் பெருகும் வள்ளி மலையில் வாழும் குறப் பெண்ணாகிய வள்ளியின் இரண்டு பூரிக்கும் மார்பகங்களையும், இரண்டு புயங்களையும் அணைத்து மகிழ்கின்றவனே, பழனி மலையில் எழுந்தருளிய பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 190 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, மலையில், இரண்டு, நெறு, மேல், பெருமாளே, வரும்