பாடல் 187 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன ...... தனதான |
முத்துக்குச் சிட்டுக் குப்பிமு டித்துச்சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட ...... நுதல்மீதே முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ ...... கெழிலாடத் தித்திக்கச் சொற்சொற் றுப்பிதழ் நச்சுக்கட் கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு ...... தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பல லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி ...... யுழல்வேனோ மெத்தத்துக் கத்தைத் தித்தியி னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர ...... மருள்வாயே வித்தைக்குக் கர்த்ருத் தற்பர முக்கட்சித் தர்க்குப் புத்திர விச்சித்ரச் செச்சைக் கத்திகை ...... புனைவோனே நித்யக்கற் பத்திற் சித்தர்க ளெட்டுத்திக் குக்குட் பட்டவர் நிஷ்டைக்கற் புற்றப் பத்தர்கள் ...... அமரோரும் நெட்டுக்குப் புட்பத் தைக்கொடு முற்றத்துற் றர்ச்சிக் கப்பழ நிக்குட்பட் டத்துக் குற்றுறை ...... பெருமாளே. |
முத்தால் ஆன குச்சி அணிந்து குப்பி என்னும் சடை அணியை முடித்து, பூ மாலையைக் கொண்டையில் பின்னர்ச் சுற்றியும், முன் பக்கத்தில் அழகு விளங்க நெற்றியின் மேல் சிறந்த பச்சை நிறப் பொட்டை இட்டுக் கொண்டும், வகிட்டில் அணிகலமாகிய ரத்னச் சுட்டி, அழகிய பட்டுச் சேலை ஆகியவைகளை ஒழுங்காகவும் அலங்காரமாகவும் அணிந்து, நல்ல பேரழகு பொலிய, இனிமை தரும்படி சொல்லும் பேச்சு, பவளம் போன்ற வாயிதழ், விஷம் நிறைந்த கண், விபா£தமான கற்பனை உரைகள் (இவைகளைக் கொண்டு) மயக்குவிக்கும் விலைமகளிரின் சிமிழை ஒத்ததும் கச்சு அணிந்ததும் (ஆகிய) மேருமலை போன்ற மார்பகங்களை செவ்வையாகப் பற்றி பல விதமான நாணம் கொள்ளத் தக்க செயல்களுக்கு உட்பட்டு, மேற்கொண்டு அவர்கள் வலையில் என்னுயிர் மாட்டிக் கொண்டு மயங்கி கேடுற்று இவ்வாறு திரிவேனோ? அதிகமான துக்கத்தை அனுபவித்த நான் இனிமேல் மனத்தில் உண்மையுடன் உன்னை மெச்சிப் புகழ்ந்து, விண்ணுலகத்திலும் மேலான ஞான வீட்டைப் பெறும்படி அருள்வாயாக. கல்விக்குத் தலைவனே, பரம்பொருளே, முக்கண்ணராகிய சிவபெருமானுக்குப் பிள்ளையே, விசித்திரமான வெட்சிப் பூ மாலையை அணிபவனே, நித்ய பூமியில் உள்ள சித்தர்களும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், தியானத்தில் அன்பு பூண்ட பக்தர்களும், தேவர்களும், நெடுந் தூரத்தில் இருந்து மலர்களைக் கொண்டு வந்து உன் சந்நிதியில் வந்து நின்று அர்ச்சனை செய்து துதிக்க, பழனிப் பதியில் ஆட்சி பூண்டு மகிழ்ந்து உறைகின்ற பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 187 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்தத்தத், கொண்டு, தத்தன, தத்தத், வந்து, பெருமாளே, அணிந்து