பாடல் 188 - பழநி - திருப்புகழ்

ராகம் - பேஹாக்; தாளம் -
திஸ்ர த்ருபுடை - 7
தானந்தன தானன தானன தானந்தன தானன தானன தானந்தன தானன தானன ...... தனதான |
மூலங்கிள ரோருரு வாய்நடு நாலங்குல மேனடு வேரிடை மூள்பிங்கலை நாடியொ டாடிய ...... முதல்வேர்கள் மூணும்பிர காசம தாயொரு சூலம்பெற வோடிய வாயுவை மூலந்திகழ் தூண்வழி யேயள ...... விடவோடிப் பாலங்கிள ராறுசி காரமொ டாருஞ்சுட ராடுப ராபர பாதம்பெற ஞானச தாசிவ ...... மதின்மேவிப் பாடுந்தொனி நாதமு நூபுர மாடுங்கழ லோசையி லேபரி வாகும்படி யேயடி யேனையும் ...... அருள்வாயே சூலங்கலை மான்மழு வோர்துடி வேதன்தலை யோடும ராவிரி தோடுங்குழை சேர்பர னார்தரு ...... முருகோனே சூரன்கர மார்சிலை வாளணி தோளுந்தலை தூள்பட வேஅவர் சூளுங்கெட வேல்விடு சேவக ...... மயில்வீரா காலின்கழ லோசையு நூபுர வார்வெண்டைய வோசையு மேயுக காலங்களி னோசைய தாநட ...... மிடுவோனே கானங்கலை மான்மக ளார்தமை நாணங்கெட வேயணை வேள்பிர காசம்பழ னாபுரி மேவிய ...... பெருமாளே. |
மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாக, உடலின் நடுவில் நான்கு அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும் நாடிகளுடன் கலந்து, முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும் (ஒவ்வொரு நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை முதுகுத் தண்டிலுள்ள சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது) (நெருப்பாறு, மயிர்ப்பாலம் என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும். நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து, (அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும் அன்பு பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக. திரி சூலம், கலைமான், மழுவாயுதம், ஒப்பற்ற உடுக்கை, பிரமனின் கபாலம் இவைகளுடன் பாம்பு, விளங்கும் தோடு, குழை இவை சேர்ந்துள்ள சிவபெருமான் பெற்ற முருகனே, சூரனுடைய கை, மார்பு, வில், வாள், அழகிய தோளும், தலையும் தூள்படும்படியாகவும், அவன் (தேவர்களைச் சிறையினின்றும் விடேன் என்று) செய்த சபதமும் பாழாகவும் வேலைச் செலுத்திய தலைவனே, மயில் வீரனே, காலில் அணிந்துள்ள கழலின் ஒலியும், சிலம்பொலியும், வீரக் காலணியின் இடிபோன்ற ஒலியும், யுக முடிவைக் காட்டும் ஓசைகளாகத் திகழும்படி நடனம் புரிபவனே, வள்ளிமலைக் காட்டில் வந்த கலை மானின் மகளாகிய வள்ளியை கூச்சம் ஏதுமின்றி அணைக்கின்ற தலைவனே, ஒளி வீசும் பழனியில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன..ஆதாரம்இடம்பூதம்வடிவம்அக்ஷரம்தலம்கடவுள்மூலாதாரம்குதம்மண்4 இதழ் கமலம்முக்கோணம்ஓம்திருவாரூர்விநாயகர்சுவாதிஷ்டானம்கொப்பூழ்அக்கினி6 இதழ் கமலம்லிங்கபீடம்நாற் சதுரம்ந (கரம்)திருவானைக்காபிரமன்மணிபூரகம்மேல்வயிறுநீர்10 இதழ் கமலம்பெட்டிப்பாம்புநடு வட்டம்ம (கரம்)திரு(வ)அண்ணாமலைதிருமால்அநாகதம்இருதயம்காற்று12 இதழ் கமலம்முக்கோணம்கமல வட்டம்சி (கரம்)சிதம்பரம்ருத்திரன்விசுத்திகண்டம்ஆகாயம்16 இதழ் கமலம்ஆறு கோணம்நடு வட்டம்வ (கரம்)திருக்காளத்திமகேசுரன்ஆக்ஞாபுருவத்தின் நடுமனம்3 இதழ் கமலம்ய (கரம்)காசி(வாரணாசி)சதாசிவன்பிந்து சக்கரம்(துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,பிரமரந்திரம்)கபாலத்தின்மேலே 1008இதழ் கமலம் திருக்கயிலைசிவ . சக்திஐக்கியம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 188 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானன, இதழ், கரம், பத்து, இடைகலை, தானந்தன, முனை, பிங்கலை, சுழு, சக்கரம், ஸஹஸ்ராரம், நாடிகளுள், ஒன்று, பெயர்களும், உரிய, யும், சுவாசம், விடும், உடலில், என்றும், சுழுமுனை, என்னும், மேல், பெருமாளே, வாயுவை, நூபுர, மூன்று, ஒப்பற்ற, ஒலியும், காற்றுக்கு, தலைவனே, விளங்கும், வழியில், பெயர்