பாடல் 164 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத் தநுமுட் டவளைப் ...... பவனாலே தரளத் திரளிற் புரளக் கரளத் தமரத் திமிரக் ...... கடலாலே உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக் கொளிமட் குமிகைப் ...... பொழுதாலே உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக் குனநற் பிணையற் ...... றரவேணும் திகைபத் துமுகக் கமலத் தனைமுற் சிறையிட் டபகைத் ...... திறல்வீரா திகழ்கற் பகமிட் டவனக் கனகத் திருவுக் குருகிக் ...... குழைமார்பா பகலக் கிரணப் பரணச் சடிலப் பரமற் கொருசொற் ...... பகர்வோனே பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் ...... பெருமாளே. |
தக்க தருணமென்று பார்த்து தனி நிலையில் (அவள் மீது) பகை பூண்டு, தன் கையில் உள்ள வில்லை நன்றாக வளைக்கும் மன்மதனாலே, முத்துக் குவியல்கள் புரள்கின்றதும், நஞ்சின் பிறப்புக்கு இடமானதும், ஒலி செய்வதும், இருள் நிறைந்ததுமாகிய கடலாலும், நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல் வானில் நிரம்பித் தோன்ற, பகல் பொழுது போய், ஒளி மங்கி, மிஞ்சி நிற்கும் (இரவுப்) பொழுதாலும், வாக்கு அற்றும், உணர்வு அற்றும், உயிர் இளைத்து நிற்கும் கொடி போன்ற (என்) மகளுக்கு உனது நல்ல மாலையை நீ தந்தருள வேண்டும். பத்துத் திசைகளில் உள்ளவர்களும் கலங்க, தாமரையில் உள்ள பிரமனை முன்பு சிறையில் அடைத்து பகைமைத் திறத்தைக் காட்டிய வீரனே, (வேண்டியதைத் தந்து) விளங்கும் கற்பக மரங்கள் நிறைந்த சோலைகளை உடைய பொன்னுலகத்து லக்ஷ்மி (தேவயானை) மீது மனம் உருகிக் குழைந்து அணைந்த மார்பனே, ஞாயிறு போல ஒளி கொண்ட, பாரமான சடையைக் கொண்ட பரமனாகிய சிவபெருமானுக்கு, ஒப்பற்ற பிரணவச் சொல்லை உபதேசித்தவனே, வாயு மண்டலம் வரையும் நிறைந்து உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழநித் தலத்தில் நிற்கும் குமரப் பெருமாளே.
இப்பாட்டு அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது தாய் பாடியது.மன்மதன், அவனது வில், கடல், இரவு, இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 164 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், நிற்கும், அற்றும், விளங்கும், கொண்ட, உள்ள, குமரப், பெருமாளே, மீது