பாடல் 163 - பழநி - திருப்புகழ்

ராகம் - பூர்வி கல்யாணி;
தாளம் - அங்கதாளம் - 7 1/2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமி-2
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான |
தகர நறுமலர் பொதுளிய குழலியர் கலக கெருவித விழிவலை படவிதி தலையி லெழுதியு மனைவயி னுறவிடு ...... வதனாலே தனயர் அனைமதர் மனைவியர் சினெகிதர் சுரபி விரவிய வகையென நினைவுறு தவன சலதியின் முழுகியெ யிடர்படு ...... துயர்தீர அகர முதலுள பொருளினை யருளிட இருகை குவிசெய்து ளுருகிட வுருகியெ அரக ரெனவல னிடமுற எழிலுன ...... திருபாதம் அருள அருளுடன் மருளற இருளற கிரண அயில்கொடு குருகணி கொடியொடு அழகு பெறமர கதமயில் மிசைவர ...... இசைவாயே சிகர குடையினி னிரைவர இசைதெரி சதுரன் விதுரனில் வருபவ னளையது திருடி யடிபடு சிறியவ னெடியவன் ...... மதுசூதன் திகிரி வளைகதை வசிதநு வுடையவ னெழிலி வடிவின னரவுபொன் முடிமிசை திமித திமிதிமி யெனநட மிடுமரி ...... மருகோனே பகர புகர்முக மதகரி யுழைதரு வனிதை வெருவமுன் வரஅருள் புரிகுக பரம குருபர இமகிரி தருமயில் ...... புதல்வோனே பலவின் முதுபழம் விழைவுசெய் தொழுகிய நறவு நிறைவயல் கமுகடர் பொழில்திகழ் பழநி மலைவரு புரவல அமரர்கள் ...... பெருமாளே. |
மயிர்ச் சாந்தும், மணமுள்ள மலர்களும் நிறைந்த கூந்தலுடைய (விலை) மகளிரின் குழப்பம் தரும் கர்வம் மிக்க கண் வலையில் படும்படியாக தலையில் விதியால் எழுதப்பட்டும், மனைவியோடு கூடிய இல்லற வாழ்க்கையில் இருக்க வேண்டி அமைந்தபடியால், மக்கள், தாய், சுற்றத்தார், மனைவியர், நண்பர்கள், பசு முதலிய பல வகையான சிந்தனை ஏற்பட, ஆசைக் கடலில் மூழ்கி துன்பம் உறுகின்ற துயரம் நீங்க, அகர எழுத்தை முதலாகக் கொண்ட (அ + உ+ ம் = ஓம் என்ற) பிரணவப் பொருளை (நீ) உபதேசிக்க, இரண்டு கைகளையும் குவித்து மனம் உருகி உருகி, ஹர ஹர எனக் கூறி உனது வலப் புறத்தும் இடப் புறத்தும் இருந்து, உன்னுடைய அழகிய இரண்டு திருவடிகளை நீ தந்து அருளவும், அங்ஙனம் பெற்ற அருள் ஆசியினால் என் மயக்கம் நீங்க, அஞ்ஞானமும் அகல, ஒளி வீசும் வேலும், கோழிக் கொடியும் விளங்க, அழகாக பச்சை நிற மயிலின் மீதில் வர நீ இசைந்தருளுக. கோவர்த்தன மலையாகிய குடையின் கீழே பசுக் கூட்டம் வந்து சேர குழல் இசையை வாசித்துக் காட்டிய சமர்த்தன், விதுரனுடைய வீட்டுக்கு விரும்பி (விருந்து செய்ய) வந்தவன்*, வெண்ணெயைத் திருடி அடிபட்ட சிறிய குழந்தை, (திரிவிக்ர ரூபம் கொண்ட) பெரியவன், மது என்ற அசுரனைக் கொன்றவன், சக்கரம், சங்கு, தண்டம், வாள், வில் (முதலிய ஐந்து ஆயுதங்களை) உடையவன், மேக நிறம் கொண்டவன், காளிங்கன் என்னும் பாம்பின் அழகிய பணாமுடியின் மேல் திமித திமி திமி என்ற பல ஒலிகளுடன் நடனம் செய்கின்ற திருமாலின் மருகனே, அழகிய, புள்ளியைக் கொண்ட முகத்தை உடைய, மதம் கொண்ட யானையாகிய கணபதியை, மான் பெற்ற மங்கையாகிய வள்ளி அஞ்சும்படி (யானை உருவில்) முன்னே வரச் செய்தருளிய குகனே, மேலானவனே, குருபரனே, இமவான் பயந்தருளிய மயில் போன்ற உமையின் மகனே, பலாவின் பழுத்த பழத்தினின்று கனிந்து ஒழுகிய தேன் நிறைந்த வயல்களும், கமுகு மரங்களும் அடர்ந்த சோலைகள் விளங்கும் பழனி மலையில் எழுந்தருளி உள்ள அரசே, தேவர்களின் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 163 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதன, கொண்ட, தகதிமி, அழகிய, இரண்டு, திமி, உருகி, புறத்தும், பெற்ற, முதலிய, திருடி, மனைவியர், திமித, பெருமாளே, நிறைந்த, நீங்க