பாடல் 162 - பழநி - திருப்புகழ்

ராகம் - பிலஹரி ; தாளம் -
அங்கதாளம் - 5 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2
தானந்த தனன தான தானந்த தனன தான தானந்த தனன தான ...... தனதான |
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத நாடண்டி நமசி வாய ...... வரையேறி நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும் ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய் தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி சீரங்க னெனது தாதை ...... ஒருமாது சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல காடந்த மயிலி லேறு ...... முருகோனே காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே. |
ஞான இந்திரியங்கள் யாவும் ஒருமுகமாகக் கூடி, வானில் சந்திரன் சூரியன் இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து, நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின் மீது ஏறி, நாவுக்குப் பேரின்ப இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய, அந்தச் சிவயோக சமாதியில் உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து, ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும், நான் என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி, ஜீவாத்மாவாகிய யானும் பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி, மெய்ஞ்ஞான வித்தையாகிய குதிரையின் முதுகில் ஏறி, உலகம் முழுதும் வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக. தேனை உடையதும் அழகியதும் ஆன கொன்றை மலரையும், ஆத்தி மலர் மாலையையும், நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும், சிறந்த திருமேனியை உடையவரும், எனது தந்தையாரும், ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச* சக்திகளின் கலவையான வடிவழகி, சிவத்தின் காதலி, சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி வடிவினாள் ஆகிய உமா தேவியார் சேர்ந்திருக்கிற இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப் பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே, காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக காட்டில் நீல நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே, மன்மதனுடைய கரத்தில் உள்ள மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண, வேடர் குலப் பெண் வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும் எமது பழநி மலையின் எழுந்தருளிய பெருமாளே.
* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 162 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - ஜோதி, தானந்த, உள்ள, மலர், மலையின், வடிவமாகி, பழநி, கூடி, அருவி, தகிட, பெருமாளே