பாடல் 158 - பழநி - திருப்புகழ்

ராகம் - வலஜி; தாளம் - ஆதி
- 4 களை - 32
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2
தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான |
சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் கங்கு காகமிவை தின்ப ...... தொழியாதே தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து ...... நிலைகாணா ஆயதுந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று ...... மடவார்பால் ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி ழுந்து மாளுமெனை யன்பு ...... புரிவாயே மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மண்ட கோளமுந டுங்க வாய்பிளறி நின்று மேகநிகர் தன்கை ...... யதனாலே வாரியுற அண்டி வீறொடுமு ழங்கு நீரைநுகர் கின்ற கோபமொடெ திர்ந்த வாரண இரண்டு கோடொடிய வென்ற ...... நெடியோனாம் வேயினிசை கொண்டு கோநிரைபு ரந்து மேயல்புரி செங்கண் மால்மருக துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து ...... பொடியாக வேலைவிடு கந்த காவிரிவி ளங்கு கார்கலிசை வந்த சேவகன்வ ணங்க வீரைநகர் வந்து வாழ்பழநி யண்டர் ...... பெருமாளே. |
சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த, நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை, நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ? தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம் மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில் மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி, அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து, காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக. மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து, உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று, மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால் எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து, நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும், புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே, பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி, வேலைச் செலுத்திய கந்தவேளே, காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன்* உன்னைத் துதிக்க வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர்.இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 158 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்த, தானதன, வந்து, ஆகிய, கொண்டு, நிறைந்த, பெருமாளே, மாயையில், உடையவனும், நிலை, வென்ற, ணங்க, ரம்பு, நின்று, இரண்டு, தகிட, வந்த