பாடல் 157 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன தனதனன தனனதன தத்தத் தனத்ததன ...... தனதான |
சிறுபறையு முரசுதுடி சத்தக் கணப்பறையு மொகுமொகென அதிரவுட னெட்டிப் பிடித்துமுடி சிறுகயிறு நெடிதுகொடு கட்டிட் டிழுக்கஇனி ...... யணுகாதே சிலதமர்க ளுறவுகிளை கத்திப் பிதற்றியெடு சுடலைதனி லிடுகனலை யிட்டுக் கொளுத்துபுனல் திரைகடலில் முழுகெனவு ரைக்கப் படிக்குடிலை ...... யொழியாதே மறைமுறையி னிறுதிநிலை முத்திக் கிசைத்தபடி உடலுயிர்கள் கரணவெளி பட்டுக் குணத்திரயம் வழிபடவும் நினதடிமை யிச்சைப் படுத்துவது ...... மொருநாளே வருதுரக மயில்மணிகள் சத்திக்க நிர்த்தமிட ஒருபதுட னிருபுயமு மட்டுத் தொடைக்கிசைய மனமகிழ இனியமொழி செப்பிச் சிவத்தபத ...... மருள்வாயே நறையிதழி யறுகுபல புட்பத் திரட்களொடு சிறுபிறையு மரவுமெழி லப்புத் திருத்தலையி னளினமுற அணிசடையர் மெச்சிப் ப்ரியப்படவு ...... மயிலேறி நவநதிகள் குமுகுமென வெற்புத் திரட்சுழல அகிலமுத லெழுபுவன மெத்தத் திடுக்கிடவும் நவமணிகள் உரகனுடல் கக்கத் துரத்திவரு ...... முருகோனே குறவர்முனை கெடமனது வெட்கப் படக்குடிலில் மலையிலெழு தினையிதணில் வைத்துச் சிறுக்கியிரு குவிமுலையு மணியிடையு மெச்சிப் புணர்ச்சிசெயு ...... மணவாளா குறுமுநிவ னிருபொழுதும் அர்ச்சித்து முத்திபெற அறிவுநெறி தவநிலைகள் செப்புத் தமிழ்க்கினிய குருகுமர பழநிவளர் வெற்புத் தனிற்றிகழு ...... பெருமாளே. |
சிறிய பறையும், முரசும், உடுக்கையும், ஒலிக்கின்ற கூட்டமான பறைகளும், மொகு மொகு என்ற பெரும் சப்தத்துடன் முழங்க, உடனே யம தூதர்கள் எட்டிப் பிடித்து, (தலை) முடியைச் சிறிய பாசக் கயிற்றால் நெடு நேரம் கட்டி இழுக்கவும், இனி அவர் பிழைக்க மாட்டார் என்று கருதி தூரத்தில் இருந்தே சில உறவினர்கள், சுற்றம் மிகுந்த உடன்பிறந்தார்கள் கூச்சலிட்டு அலறி அழுது, (உடலை) எடுத்துக்கொண்டு போய் சுடுகாட்டில் (கிரமப்படி) வைக்க வேண்டிய தீயை வைத்துக் கொளுத்திய பின்னர், (நீங்கும் முன்பு) நீரில் அலை வீசும் கடலில் முழுகுங்கள் எனச் சொல்லும்படிக்குள்ள இந்த நிலையற்ற உடலை எடுக்கும் பிறப்பு என்பது ஒருநாளும் நீங்காதோ? வேத நூல்களில் முடிவாகச் சொல்லப்பட்ட நிலையாகிய முக்தி பெறுதற்குச் சொல்லிய வழிப்படி, உடலும் உயிர்களும் (மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக்கரணங்களும் பர வெளியில் சம்பந்தப்பட்டு, (அதனால் சத்வ, ராஜஸ, தாமஸமாகிய) முக்குணங்களும் வழிபட்டு ஒழுக, உன் அடிமையாகிய எனக்கு உன் மீது இச்சை வருமாறு என்னை ஆண்டருளும் ஒரு நாளும் கிடைக்குமோ? நீ ஏறி வரும் குதிரையாகிய மயிலின் மணிகள் சத்தம் செய்ய நடனம் ஆடும்படி, பன்னிரு புயங்களும் தேன் ஒழுகும் மாலைக்குப் பொருந்தி விளங்க, மனம் மகிழுமாறு இனிய உபதேச மொழியைக் கூறி, உனது சிவந்த திருவடியை அருள்வாயே. வாசனையுள்ள கொன்றை மலரையும், அறுகம் புல்லையும், பலவகையான மலர்க் குவியல்களையும், பிறைச் சந்திரனையும், பாம்பையும், அழகிய கங்கை நதியையும், சிறந்த சென்னி மீது இனிது விளங்க அணிந்துள்ள சடையராகிய சிவபெருமான் புகழ்ந்து விரும்பப்பட மயிலில் ஏறி, ஒன்பது நதிகளும்* குமுகுமு என்று கலங்கவும், மலைக் கூட்டங்கள் சுழற்சி உறவும், பூலோகம் முதலான ஏழு உலகங்களும் மிகவும் திடுக்கிடவும், பாம்பின் உடலினின்று ஒன்பது** மணிகள் வெளிப்படவும், அசுரர்களைத் துரத்தி வரும் முருகனே, குறவர்களுடைய வெறுப்பு அழியவும், மனது வெட்கப்படவும், குடிசையிலும், மலையின் கண் உள்ள தினைப் புனத்துப் பரணிலும் இருந்த சிறு பெண்ணாகிய வள்ளியின் இரண்டு குவிந்த மார்பகங்களையும், அழகிய இடையையும் பாராட்டி அவளை மணந்த கணவனே, குட்டை வடிவனராகிய அகத்திய முனிவர் காலை மாலை இரு போதிலும் அர்ச்சனை செய்து முக்தி அடையும்படி அவருக்கு ஞான மார்க்கத்தையும், தவ ஒழுக்கங்களையும் சொல்லிய, தமிழுக்கு இனிய குருவே, குமரனே, பழனியில் உள்ள அருள் வளர்கின்ற மலையில் விளங்கும் பெருமாளே.
* ஒன்பது நதிகள்: கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கோதாவரி, காவேரி, சோணை, துங்கபத்திரை.
** ஒன்பது மணிகள்: வைரம், வைடூர்யம், முத்து, பவளம், நீலம், மரகதம், கோமேதகம், புஷ்பராகம், மாணிக்கம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 157 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, மணிகள், ஒன்பது, தனத்ததன, தனனதன, தத்தத், விளங்க, வரும், கங்கை, உள்ள, மீது, அழகிய, இனிய, முக்தி, திடுக்கிடவும், வெற்புத், மெச்சிப், பெருமாளே, சிறிய, சொல்லிய, உடலை, மொகு, மனம்