பாடல் 154 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் தனனத்தத் தனனத் தத்தத் ...... தனதான |
சகடத்திற் குழையிட் டெற்றிக் குழலுக்குச் சரம்வைத் தெற்றிப் புளகித்துக் குவளைக் கட்பொற் கணையொத்திட் டுழலச் சுத்தித் தரளப்பற் பவளத் தொட்டக் களபப்பொட் டுதலிட் டத்திக் ...... குவடான தனதுத்திப் படிகப் பொற்பிட் டசையப்பெட் பசளைத் துப்புக் கொடியொத்திட் டிடையிற் பட்டைத் தகையிற்றொட் டுகளப் பச்சைச் சரணத்துக் கியலச் சுற்றிச் சுழலிட்டுக் கடனைப் பற்றிக் ...... கொளுமாதர் சுகமுற்றுக் கவலைப் பட்டுப் பொருள்கெட்டுக் கடைகெட் டுச்சொற் குளறிட்டுத் தடிதொட் டெற்றிப் பிணியுற்றுக் கசதிப் பட்டுச் சுகதுக்கத் திடர்கெட் டுற்றுத் தளர்பட்டுக் கிடைபட் டுப்பிக் ...... கிடைநாளிற் சுழலர்ச்சக் கிரியைச் சுற்றிட் டிறுகக்கட் டுயிரைப் பற்றிக் கொளுகப்பற் பலரைக் கட்டிக் கரம்வைத்துத் தலையிற் குத்திச் சுடுகட்டைச் சுடலைக் கட்டைக் கிரையிட்டுப் பொடிபட் டுட்கிச் ...... சடமாமோ திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட் ...... டிடிபேரி திமிலைக்கைத் துடிதட் டெக்கைப் பகடிட்டுப் பறையொத் தக்கட் டிகையெட்டுக் கடல்வற் றித்தித் தரவுக்கக் கிரியெட் டுத்தைத் தியருக்குச் சிரமிற் றுட்கச் சுரர்பொற்புச் சொரியக் கைத்தொட் ...... டிடும்வேலா பகலைப்பற் சொரியத் தக்கற் பதிபுக்கட் டழலிட் டுத்திட் புரமட்கிக் கழைவிற் புட்பச் சரனைச்சுட் டயனைக் கொத்திப் பவுரிக்கொட் பரமர்க் குச்சற் குருவொத்துப் பொருளைக் கற்பித் ...... தருள்வோனே பவளப்பொற் கிரிதுத் திப்பொற் றனகொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத் திதழ்பற்றிப் புணர்ச்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப் பதமுத்துப் பழநிச் சொக்கப் ...... பெருமாளே. |
சக்கரம் போல வட்டமான தோடுகளைப் பூண்டு கண்டோர் மனதைத் தாக்கியும், கூந்தலில் பூமாலை வைத்துத் தாக்கியும், புளகாங்கிதம் கொண்டு குவளை மலர் போன்ற கண்கள் அழகிய அம்புக்கு நிகராகச் சுழல, தூய முத்துப் போன்ற பற்கள் பவளத்தை ஒத்த இதழுக்கு அருகிலே விளங்க, சந்தனக் கலவை அப்பப்பட்ட யானை போன்றது, மலை போன்றது, என்னும்படி மார்பகங்கள் தேமலுடன் படிகத்தின் அழகைப் பூண்டு அசைய, விரும்பத் தக்க பசளைக் கொடியையும் பவளக் கொடியையும் நிகர்க்கும் இடையில் பட்டாடையைத் தக்கபடி தொடும்படி இரண்டு பச்சை நிறமான பாதம் வரை தொங்குமாறு பொருந்தச் சுற்றி வளைய உடுத்தி, (தாங்கள் பெற வேண்டிய பொருளைக்) கைப்பற்றிக் கொள்ளும் விலைமாதர்களின் சுகத்தைப் பெற்று (பின்னர்) கவலைப் பட்டு பொருள் எல்லாம் அழிந்து, முழுவதும் கெட்டு, மொழியும் குளறி, ஊன்று கோல் பிடித்து நடக்க வேண்டி வந்து, நோய் உற்று வேதனைப் பட்டு சுக துக்கமாகிய சஞ்சலங்களை அடைந்துத் துன்புற்று சோர்வடைந்து, படுக்கையில் கிடந்து உடல் வீங்கிக் கிடக்கும் நாட்களில், சுழன்று வரும் யம தூதர்கள் பாசக் கயிற்றால் சுற்றிட்டு அழுத்தமாகக் கட்டி (என்) உயிரைப் பற்றிக் கொண்டு போகும் போது, பற்பல உற்றார் உறவினர் என் உடலைக் கட்டி, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு, சுடுதற்குரிய என் உடம்பாகிய கட்டையை மயானத்தில் உள்ள விறகுக் கட்டைகளுக்கு இரையாக ஆக்கி பொடி பட்டுச் சாம்பலாகி ஒழிந்து போகும் இந்த உடல் விரும்பத் தக்கது ஆகுமோ? திகுடத்திக் குகுடட் டுட்டுட் டமடட்டட் டமடட் டிக்குட் டிமிடிட்டிட் டிமிடிட் டிக்குத் தொகுதொக்குத் தொகுதத் தொக்குச் செகணக்கச் செகணச் செக்குத் தகுடத்தத் தகுடத் தட்டுட்டு என்று மிகுந்த சத்தத்துடன் இடி போல் முழங்கும் பேரிகை, திமிலை என்னும் ஒரு வகையான பேரிகை, சிறிய உடுக்கை, தட்டி எழுகின்ற ஒலி வன்மை கொண்ட பறை ஆகிய இவை எல்லாம் பேரொலி செய்து முழங்க, இடம் அகன்ற, எட்டு திசைகளிலும் உள்ள, கடல் வறண்டு தீயைக் கக்கவும், தளர்ந்து எண் கிரிகளும் நிலைகுலைய, அசுரர்கள் தலை முறிந்து ஒழியவும், தேவர்கள் பொன் மாரியைச் சொரிய திருக் கரத்தில் எடுத்த வேலாயுதனே, சூரியனின் பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே, பவளப் பொன் மலை போல, தேமலுடன் கூடிய, அழகிய மார்பகத்தை உடையவளும், மழலையான கிளி போன்ற மொழியை உடையவளுமான வள்ளியின் சொற்களில் ஆசை வைத்து அன்பு பூண்டு, தாமரைப் பூ போன்ற இதழைப் பற்றி சேர்ந்து களித்தவனே, அழகிய பொன்னும், பளிங்கும், பவளமும் மரகதமும், இன்ப முத்தும் போல் மனம் இனிக்கும் பழநியில் வீற்றிருக்கும் சொக்கப் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 154 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத்தத், தத்தத், தனனத், கொண்டு, அழகிய, பூண்டு, பற்றிக், தேமலுடன், விரும்பத், போன்றது, கொடியையும், பெருமாளே, தாக்கியும், உடல், உள்ள, போல், பேரிகை, பொன், தலையில், போகும், எல்லாம், சொக்கப், கட்டி, பட்டு, தகுடத், டமடட்டட், டமடட், டிக்குட், டிமிடிட்டிட், டுட்டுட், குகுடட், கவலைப், பட்டுச், திகுடத்திக், டிமிடிட், டிக்குத், செக்குத், தகுடத்தத், பொருளைக், செகணச், செகணக்கச், தொகுதொக்குத், தொகுதத், தொக்குச், பவளப்