பாடல் 153 - பழநி - திருப்புகழ்

ராகம் - .....; தாளம் -
தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன தான தனதனன ...... தனதான |
கோல மதிவதனம் வேர்வு தரஅளக பாரம் நெகிழவிழி வேல்கள் சுழலநுவல் கோவை யிதழ்வெளிற வாய்மை பதறியிள ...... முகையான கோக னகவுபய மேரு முலையசைய நூலி னிடைதுவள வீறு பறவைவகை கூற யினியகள மோல மிடவளைகள் ...... கரமீதே காலி னணிகனக நூபு ரமுமொலிக ளோல மிடஅதிக போக மதுமருவு காலை வெகுசரச லீலை யளவுசெயு ...... மடமானார் காதல் புரியுமநு போக நதியினிடை வீழு கினுமடிமை மோச மறவுனது காமர் கழலிணைக ளான தொருசிறிது ...... மறவேனே ஞால முழுதுமம ரோர்கள் புரியுமிக லாக வருமவுணர் சேர வுததியிடை நாச முறஅமர்செய் வீர தரகுமர ...... முருகோனே நாடி யொருகுறமின் மேவு தினைசெய்புன மீதி லியலகல்கல் நீழ லிடைநிலவி நாணம் வரவிரக மோது மொருசதுர ...... புரிவேலா மேலை யமரர்தொழு மானை முகரரனை யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக ...... மயில்வீரா வீறு கலிசைவரு சேவ கனதிதய மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் ...... பெருமாளே. |
அழகிய சந்திரனை ஒத்த முகம் வேர்வை அடையவும், கூந்தலின் கட்டு அவிழவும், கண்களாகிய வேல்கள் சுழலவும், உவமை கூறப்படும் கொவ்வைக் கனி போன்ற இதழ் வெளுக்கவும், சொற்கள் பதறவும், இளமையான மொட்டு நிலையில் இருக்கும் தாமரை ஒத்த இரண்டு மேருமலை போன்று உயர்ந்த மார்பகங்கள் அசையவும், நூல் போன்ற இடை துவளவும், விளங்கும் கிளி, புறா முதலிய பறவைகள் வகைகளின் குரல் போல் இனிமை உடைய கண்டத்தின் இன்சொல் வெளிப்படவும், கைகளில் வளையல்கள் ஒலி செய்யவும், காலில் அணிந்துள்ள பொன்னாலாகிய சிலம்பின் ஒலிகள் சப்திக்கவும், அதிக போகத்தை அனுபவிக்கும் போது பலவித காம லீலைகளை (பெற்ற பொருளுக்குத்) தக்கவாறு அளந்து செய்யும் அழகிய பொது மகளிர் மீது காதல் புரிகின்ற அநுபோகம் என்னும் ஆற்று வெள்ளத்தின் இடையே விழுந்தாலும், அடிமையாகிய நான் சிறிதும் (அந்த வெள்ளத்திலே) அழிவின்றி உன்னுடைய அழகிய திருவடிகளை ஒரு சிறிதும் மறக்க மாட்டேன். உலக முழுவதும் தேவர்களுடன் போர் செய்யும்படி பகையாக வந்த அசுரர்கள் யாவரும் ஒருமிக்க கடலில் அழியும்படி போர் செய்த வீரத்தை உடையவனே, குமரனே, முருகோனே, தேடிச் சென்று ஒரு குறப் பெண் இருந்த தினை வளரும் புனம் மீது, ஒழுங்கு மிக்க மலைப் பாறையின் நிழலில இருந்துகொண்டு, (அந்த வள்ளிக்கு) வெட்கம் உண்டாக ஆசை மொழிகளைக் கூறி, ஒப்பற்ற சாமர்த்தியச் செயல்களை புரிந்த வேலாயுதனே, விண்ணுலகத்தில் தேவர்கள் தொழும் யானைமுகக் கடவுளாகிய விநாயகர் சிவபெருமானை ஓடி வலம் வரும் முன்பே, மோதுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் உடைய கடல் சூழ்ந்த உலகை வலம் வந்த குதிரை போன்ற மயிலை உடைய வீரனே, விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே, வயல்களும் குளங்களும் பக்கங்களில் பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
* மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர், முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 153 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனதனன, உடைய, என்னும், அழகிய, சிறிதும், வேல்கள், அந்த, போர், வலம், வந்த, மீது, வீறு, மோது, மேவு, வீரை, பெருமாளே, ஒத்த, காதல், முருகோனே