பாடல் 152 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான |
கோல குங்கும கற்புர மெட்டொன் றான சந்தன வித்துரு மத்தின் கோவை செண்பக தட்பம கிழ்ச்செங் ...... கழுநீரின் கோதை சங்கிலி யுற்றக ழுத்தும் பூஷ ணம்பல வொப்பனை மெச்சுங் கூறு கொண்டப ணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர் பாலு டன்கனி சர்க்கரை சுத்தந் தேனெ னும்படி மெத்தரு சிக்கும் பாத கம்பகர் சொற்களி லிட்டம் ...... பயிலாமே பாத பங்கய முற்றிட வுட்கொண் டோது கின்றதி ருப்புகழ் நித்தம் பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் ...... தவனீயே தால முன்புப டைத்தப்ர புச்சந் தேக மின்றிம திக்கவ திர்க்குஞ் சாக ரஞ்சுவ றக்கிரி யெட்டுந் ...... தலைசாயச் சாடு குன்றது பொட்டெழ மற்றுஞ் சூர னும்பொடி பட்டிட யுத்தஞ் சாத கஞ்செய்தி ருக்கைவி திர்க்குந் ...... தனிவேலா ஆல முண்டக ழுத்தினி லக்குந் தேவ ரென்புநி ரைத்தெரி யிற்சென் றாடு கின்றத கப்பனு கக்குங் ...... குருநாதா ஆட கம்புனை பொற்குடம் வைக்குங் கோபு ரங்களி னுச்சியு டுத்தங் காவி னன்குடி வெற்பினி னிற்கும் ...... பெருமாளே. |
அழகிய குங்குமம், பச்சைக் கற்பூரம், ஒன்பது மணிகள், தகுதியான சந்தனம், பவள மாலை, செண்பகப் பூ குளிர்ந்த மகிழம் பூ செங்கழு நீர்ப் பூ இவைகளால் ஆகிய பூமாலை, தங்கச் சங்கிலி இவைகள் விளங்கும் கழுத்தும், ஆபரணம், பல வித அலங்காரங்களையும், மெச்சும்படியாக அணிந்த, பருத்த மார்பகங்களை விற்கின்ற விலைமாதர்களின் பாலுடன் பழம், சர்க்கரை, சுத்தமான தேன் என்று சொல்லும்படியாக மிகவும் ருசிக்கின்றவையும், பாவமே தருகின்றவையுமான சொற்களில் ஆசை வைக்காமல், உனது திருவடித் தாமரைகளை அடைய உள்ளத்தில் எண்ணம் கொண்டு நான் கூறி வரும் திருப்புகழ்ப் பாடல்களை தினந்தோறும் பாட வேண்டும் என்ற அன்பை வயலூரில் (எனக்குத்) தந்தவன் நீ தான். உலகத்தை முன்பு படைத்த மேலான பிரம தேவன் ஐயம் தீர்ந்து (பிரணவப் பொருளை உம்மால் அறிந்தேன் என்று) மதிக்கவும், ஒலிக்கின்ற கடல் வற்றிப் போகவும், எண் திசைகளில் உள்ள மலைகளும் நிலை குலையவும், பலரையும் வஞ்சனையால் கொன்ற கிரெளஞ்ச மலை தூளாகி விழவும், மேலும் சூரனும் பொடிபடவும், போரில் பயிற்சி கொண்ட திருக்கரத்தை அசையச் செலுத்திய ஒப்பற்ற வேலை உடையவனே, ஆலகால விஷத்தை உண்ட கழுத்தில் ருத்திராட்ச மாலையும் தேவர்களுடைய எலும்பு மாலையும் வரிசையாகத் தரித்து, சுடுகாட்டு நெருப்பின் எதிரில் போய் ஆடுகின்ற தந்தையாகிய சிவபெருமானும் மகிழ்கின்ற குரு நாதனே, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அழகிய கலசங்கள் வைத்துள்ள கோபுரங்களின் உச்சியில் நட்சத்திரங்கள் தங்குகின்ற திருவாவினன்குடி மலையில் நின்று விளங்கும் பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 152 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தந்தன, தத்தம், தத்தன, விளங்கும், மாலையும், அழகிய, சர்க்கரை, சங்கிலி, பெருமாளே