பாடல் 148 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனன தனன தனன தனன தனன தனன தனன தனன ...... தனதான |
குழல்கள் சரிய மொழிகள் பதற விழிக ளுலவ கொலைகள் செயவெ ...... களவோடே குலவு கிகிகி கிகிகி எனவு மிடறி லொலிகள் குமுற வளையி ...... னொலிமீற இளநி ரெனவு முலைக ளசைய உபய தொடையும் இடையு மசைய ...... மயில்போலே இனிய அமுத ரசமும் வடிய உபரி புரிவர் இடரில் மயலில் ...... உளர்வேனோ மிளிரு மதுர கவிதை யொளிரும் அருண கிரிசொல் விஜய கிரிசொல் ...... அணிவோனே விமலி அமலி நிமலி குமரி கவுரி தருணி விபின கெமனி ...... யருள்பாலா பழைய மறையின் முடிவி லகர மகர உகர படிவ வடிவ ...... முடையோனே பழன வயல்கள் கமுகு கதலி பனசை யுலவ பழநி மருவு ...... பெருமாளே. |
கூந்தல் சரியவும், பேச்சு பதறவும், கண்கள் புரண்டு கொலைத் தொழிலைக் காட்டவும், களவு எண்ணத்துடன் குலவுதல் செய்து, கிகிகி என்ற ஓசை எழவும், கண்டத்தில் (புட்குரல்கள்) குமுறி எழவும், வளையல்களின் ஒலி மிகுந்து மேலெழவும், இளநீர் என்று சொல்லும்படி மார்பகங்கள் அசையவும், இரண்டு தொடைகளும் இடுப்பும் அசையவும், மயில் போல் நடனமாடி, (இதழ்களில் இருந்து) இன்ப ஊற்று வடியவும் மிகுதியான கலவி புரிகின்ற பரத்தையருடைய துன்பத்திலும் மயக்கிலும் பட்டு அழிவேனோ? விளங்கிய இலக்கியச் சுவை பொலிவுறும் அருணகிரி* என்கின்ற புலவன் சொல்லுகின்ற வெற்றி மலை போன்ற புகழ் மாலையை அணிபவனே, தூய்மையானவள், மாசற்றவள், பரிசுத்தமானவள், இளமை உடையவள், பொன்னிறம் படைத்தவள், நல்ல பருவம் உடையவள், மயானத்தில் ஆடுபவள் ஆகிய உமை பெற்ற குழந்தையே, பழைமையான வேத முடிவில் பிரணவத்தை (அ + உ+ ம் = ஓம் என்ற) உருவத் திரு மேனியாகக் கொண்டவனே, நன்செய் புன்செய் நிலங்களும், கமுகு மரங்களும், வாழை, பலா மரங்களும் விளங்கும் பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இப்பாடலில் கவிஞர் அருணகிரிநாதர் தம்மைப் பற்றி மூன்றாம் மனிதர் போலக் கூறும் குறிப்பை வைத்து, சிலர் கவிஞர் இதனை இயற்றவில்லை எனக் கூறுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 148 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கிகிகி, உடையவள், மரங்களும், கவிஞர், அசையவும், எழவும், கிரிசொல், கமுகு, பெருமாளே