பாடல் 1320 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - ...;
தாளம் -
தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான |
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி அணிபொ னணிகுழை புரித்துக் காட்டி ...... யநுராக அவச இதமொழி படித்துக் காட்டி அதர மழிதுவர் வெளுப்பைக் காட்டி அமர்செய் நகநுதி யழுத்தைக் காட்டி ...... யணியாரம் ஒழுகு மிருதன மசைத்துக் காட்டி எழுத வரியிடை வளைத்துக் காட்டி உலவு முடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... யுறவாடி உருகு கடிதட மொளித்துக் காட்டி உபய பரிபுர பதத்தைக் காட்டி உயிரை விலைகொளு மவர்க்குத் தேட்ட ...... மொழிவேனோ முழுகு மருமறை முகத்துப் பாட்டி கொழுநர் குடுமியை யறுத்துப் போட்ட முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா முடுகு முதலையை வரித்துக் கோட்டி அடியர் தொழமக வழைத்துக் கூட்டி முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர் பழைய கடதட முகத்துக் கோட்டு வழுவை யுரியணி மறைச்சொற் கூட்டு பரமர் பகிரதி சடைக்குட் சூட்டு ...... பரமேசர் பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு குமர குலமலை யுயர்த்திக் காட்டு பரிவொ டணிமயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே. |
அழகு விளங்கும் கூந்தலை விரித்துக் காட்டியும், கண்களின் கடைப் புறம் இரண்டையும் சுழற்றிக் காட்டியும், அழகிய பொன்னாலாகிய ஆபரணங்களையும் குண்டலங்களையும் விளக்கமுறக் காட்டியும், காமத்தை விளக்க வல்லதும் தன் வசம் இழக்கச் செய்வதுமான இனிய பேச்சுக்களை பேசிக் காட்டியும், வாயிதழின் செம்மை இழந்த பவளம் போன்ற வெளுப்பைக் காட்டியும், போரிடும் நகக் குறி இட்டு அழுத்தினதைக் காட்டியும், அழகிய முத்து வடம் தொங்கும் இரண்டு மார்பகங்களை அசைத்துக் காட்டியும், எழுதுவதற்கு அரிய இடுப்பை வளைத்துக் காட்டியும், அணிந்து உலவி வரும் புடவையை தளர்த்திக் காட்டியும், நட்புப் பேச்சுக்களைப் பேசிக் காட்டியும், உள்ளத்தை உருக வைக்கும் பெண்குறி இடத்தை மறைப்பது போல் காட்டியும், இரண்டு சிலம்பு அணியும் பாதங்களைக் காட்டியும், உயிரையே விலைக்குக் கொள்பவராகிய அந்த விலைமாதர்கள் மேலுள்ள விருப்பத்தை நான் ஒழிக்க மாட்டேனோ? அரிய வேதங்களில் வல்லவளான பெரியவளின் (ஸரஸ்வதி - வேத முதல்வி) கணவராகிய பிரமனின் குடுமியை அறுத்துப் போட்ட முதல்வனே, குகைகள் அமைந்த பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை அழியும்படி கோபித்தவனே, இறைவன் திருவருளை நாடி, விரைந்து வரும்படி முதலையை வரவழைத்து, சூழ்ந்த அடியார்கள் துதிக்க, பிள்ளையை பெற்றோர்களிடம் சேர்ப்பிக்க (பிள்ளையை உயிரோடு தா என்று) முறை இட்ட சுந்தரர் பாடிய தமிழ்த் தேவாரத்தை* அன்பு பெருக்குடன் கேட்ட பழைய நீதிமான், பழைய மதம் பாயும் இடமாகிய முகத்தையும், தந்தத்தையும் உடைய யானையின் தோலை உரித்து அணிந்தவர், வேத மொழிகளைக் கூறும் பரம்பொருள், கங்கையைச் சடையில் சூடியுள்ள சிவபெருமான் உன்னைப் பணிய அவருக்குச் சிவ மயத்தை (பிரணவப் பொருளை) உபதேசித்த குமரனே, பழமுதிர்ச்சோலை மலையில் சிறப்புற்று விளங்கும், அன்புடன் அழகிய மயிலை நடத்திக் காட்டும் பெருமாளே.
* திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1320 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - காட்டியும், காட்டி, பழைய, தனதன, அழகிய, காட்டு, விரித்துக், தாத்த, தனத்தத், பிள்ளையை, இரண்டு, பேசிக், அரிய, உயிரோடு, கரையில், ஓராண்டு, முதலை, பாலகனை, சென்ற, விளங்கும், கோட்டு, போட்ட, குடுமியை, வளைத்துக், முதலையை, கேட்ட, பெருமாளே, நடத்திக், அழகு, பணிய, வெளுப்பைக்