பாடல் 1314 - பழமுதிர்சோலை - திருப்புகழ்

ராகம் - தேநுக
தாளம் - திஸ்ரத்ரிபுடை
தாளம் - திஸ்ரத்ரிபுடை
தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன தனனாதன தானன தத்தன ...... தனதான |
கருவாகியெ தாயுத ரத்தினி லுருவாகவெ கால்கையு றுப்பொடு கனிவாய்விழி நாசியு டற்செவி ...... நரைமாதர் கையிலேவிழ வேகிய ணைத்துயி லெனவேமிக மீதுது யிற்றிய கருதாய்முலை யாரமு தத்தினி ...... லினிதாகித் தருதாரமு மாகிய சுற்றமு நலவாழ்வுநி லாதபொ ருட்பதி சதமாமிது தானென வுற்றுனை ...... நினையாத சதுராயுன தாளிணை யைத்தொழ அறியாதநிர் மூடனை நிற்புகழ் தனையோதிமெய்ஞ் ஞானமு றச்செய்வ ...... தொருநாளே செருவாயெதி ராமசு ரத்திரள் தலைமூளைக ளோடுநி ணத்தசை திமிர்தாதுள பூதக ணத்தொடு ...... வருபேய்கள் திகுதாவுண வாயுதி ரத்தினை பலவாய்நரி யோடுகு டித்திட சிலகூகைகள் தாமுந டித்திட ...... அடுதீரா அருமாமறை யோர்கள்து தித்திடு புகர்வாரண மாதுத னைத்திகழ் அளிசேர்குழல் மேவுகு றத்தியை ...... அணைவோனே அழகானபொன் மேடையு யர்த்திடு முகில்தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே. |
கருவாய் அமைந்து தாயின் வயிற்றினில் உருவம் பெற்று, கால் கை என்ற உறுப்புக்களுடன் இனிய வாய், கண்கள், மூக்கு, உடல், செவி என்ற அங்கங்களுடன் மருத்துவச்சியின் கைகளிலே விழும்படியாக பிறந்து வந்து, படுக்கையில் படுத்துக்கொள் என்று மிகவும் பாராட்டித் தூங்கச்செய்த, அக்கரையோடு கவனிக்கும் தாயின் முலையில் நிறைந்த அமுதம் போன்ற பாலைப் பருகி இனியனாக வளர்ந்து, தனக்கென்று வாய்த்த மனைவி, உடன் அமைந்த உறவினர்கள், நல்ல வாழ்வு, நிலைத்து நிற்காத செல்வம், ஊர், இவையெல்லாம் நிலைத்து நிற்கும் எனக் கருதி, உன்னை நினைத்துப் பார்க்காத சாமர்த்தியம் உடையவனாய், உன்னிரு பாதங்களைத் தொழ அறியாத முழு மூடனாகிய என்னை, உன் புகழை ஓதி உண்மை ஞானத்தை அடையச்செய்யும் நாள் ஒன்று உண்டாகுமோ? போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுரர் கூட்டங்களின் தலை, மூளை, சதை, இறைச்சி இவைகளை தேகக் கொழுப்பும் சத்துத் தாதுக்களும் உள்ள பூதகணங்களுடன் வருகின்ற பேய்கள் திகுதிகுவென்று உணவாக உண்ண, பெருகும் ரத்தத்தை வெகுவாக வந்த நரிகள் குடித்திட, சில கோட்டான்கள் தாமும் அங்கு நடனமாட, போர் செய்த தீரனே, அரிய சிறந்த வேதநெறியாளர்கள் துதித்துப் போற்றுகின்ற, யானை வளர்த்த மகள், அழகிய தேவயானைத் தேவியையும், விளங்கும் வண்டுகள் (பூவிலுள்ள தேனுக்காக) மொய்க்கும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் தழுவுகின்றவனே, அழகிய பொன்மயமான மாடங்களின் உச்சியில் தங்கும் மேகங்களைத் தொடும் உயரமான சோலைகளும், அற்புதமான, சலனமற்ற பழமுதிர்ச்சோலை* என்னும் மலையில் வீற்றிருப்பவனே, அன்பர்கள் போற்றுகின்ற பெருமாளே.
* பழமுதிர்ச்சோலை மதுரைக்கு வடக்கே 12 மைலில் உள்ள கள்ளழகர் கோயில் என்ற தலமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1314 - பழமுதிர்சோலை - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனாதன, தத்தன, தானன, போற்றுகின்ற, அழகிய, உள்ள, பெருமாளே, டித்திட, தாயின், நிலைத்து