பாடல் 1273 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தத்ததன தானனத் தத்ததன தானனத் தத்ததன தானனத் ...... தனதான |
முத்துமணி யாரமொய்த் திட்டஇரு கோடுமுற் பட்டகரி போலுமத் ...... தனமாதர் முற்றுமதி யார்முகத் துற்றமுனை வேலுறப் பட்டுமுகில் போல்மனத் ...... திருள்மூடிச் சுத்தமதி போய்வினைத் துட்டனவ னாய்மனத் துக்கமுற வேமிகச் ...... சுழலாதே சொற்கள்பல நாவினிற் றொட்டுனிரு தாடொழச் சொற்கமல வாழ்வுசற் ...... றருள்வாயே கொத்துமுடி யானபத் தற்றுவிழ வேகுறிப் புற்றஅதி கோபனச் ...... சுதன்மாயன் கொற்றமரு காகுறக் கொச்சைமற மாதினுக் கிச்சைமொழி கூறுநற் ...... குமரேசா பத்தியுட னேநினைத் தெத்துமடி யார்வினைப் பற்றுவிடு மாமறைப் ...... பொருளானாய் பத்திவர ஞானசொற் கற்றவர்கள் பாடுநற் பக்ஷபத தேவர்மெய்ப் ...... பெருமாளே. |
முத்தாலும், ரத்தினத்தாலும் ஆன மாலைகள் நெருங்கியுள்ள இரண்டு மலைகள் போலவும், எதிர்த்து வரும் யானைகள் போலவும் உள்ள அந்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகத்தில் உள்ள கூரிய வேல் போன்ற கண்களால் தாக்கப்பட்டு, கரிய மேகம் போல் மனத்தில் அஞ்ஞான இருள் வந்து மூடி, தெளிவான தூய அறிவு போய் செயலில் துஷ்டத்தனம் உடையவனாய், மனத்தில் துக்கம் கொண்டவனாய் மிகவும் கலக்கம் உறாமல், பல வகையான சொற்களை நாவால் தொடுத்து, பாடித் துதித்து, உனது இரு திருவடிகளைத் தொழ, புகழ் மிக்க தாமரைப் பாதங்களை கொஞ்சம் தயை புரிந்து அருள் செய்வாயாக. (ராவணனுடைய) கொத்தாக இருந்த பத்துத் தலைகளும் அறுபட்டு விழ, குறி வைத்து அம்பு எய்த, மிக்க கோபம் கொண்டவனாகிய அச்சுதனாம் ராமன், மாயவனின் (திருமாலின்) வீரம் வாய்ந்த மருகனே, குறக் குலத்துச் சாதாரண வேட்டுவப் பெண்ணாம் வள்ளிக்கு காம இச்சை காட்டும் பேச்சுக்களைப் பேசிய நல்ல குமரனே, பக்தியுடன் உன்னைத் தியானித்துப் போற்றும் அடியார்களுடைய வினைப் பற்றைப் போக்க வல்ல சிறந்த வேதப் பொருள் ஆனவனே, பக்தி, சிறந்த ஞானம் இவைகளைக் கொண்ட சொற்களைக் கற்றவர்கள் பாடுகின்ற நல்ல அன்புக்கு உரியவனே, தேவர்களின் உண்மைப் பொருளான பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1273 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தத்ததன, தானனத், மிக்க, சிறந்த, மனத்தில், நல்ல, போலவும், கற்றவர்கள், பெருமாளே, உள்ள