பாடல் 1272 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ்

ராகம் -
...; தாளம் -
தானதன தனத்ததந்த, தானதன தனத்ததந்த தானதன தனத்ததந்த ...... தனதான |
மாதர்மயல் தனிற்கலந்து காமபனி யெனப்புகுந்து மாடவிய லெனச்சுழன்று ...... கருவூறி மாறிபல வெனச்சுமந்து தேனுகுட மெனத்திரண்டு மாதமிது வெனத்தளர்ந்து ...... வெளியாகி வேதபுவி தனிற்கழன்று ஏனமென வெனத்தவழ்ந்து வீறுமணி களைப்புனைந்து ...... நடைமேலாய் வேணவித மெனத்திரிந்து நாறுபுழு குடற்றிமிர்ந்து வேசிவலை தனிற்கலந்து ...... மடிவேனோ ஆதிசர ணெனக்கயங்கு லாவமுத லையைக்கிடங்கி லாரவுடல் தனைப்பிளந்த ...... அரிநேமி ஆமைகய லெனச்செயங்கொள் கோலகுற ளரித்தடங்கை யானஅர வணைச்சயந்தன் ...... மருகோனே சோதியுரு வெனத்திரண்டு கோலஅரு ணையிற்கலந்த சோமனணி குடிற்சிலம்ப ...... னருள்பாலா தோகைமயி லெனச்சிறந்த ரூபிகுற மகட்கிரங்கி தோள்களிறு கிடப்புணர்ந்த ...... பெருமாளே. |
பெண்ணோடு காம மயக்கத்தில் ஈடுபட்டு, அன்பினால் ஏற்பட்ட பனி போல ஒரு துளி உட்சென்று, ஓர் உளுந்து போலச் சுழற்சி உற்று, கர்ப்பத்தில் ஊறி, உருவம் மாறுதல் ஏற்பட்டு, பலாப் பழம் போல ஆன வயிற்றைச் சுமந்து, பசுவின் பனிக்குடம் போலப் பருத்து, பேறு காலம் வந்தது என்று கூற, வயிறு தளர்ந்து, குழந்தையாக வெளிப்பட்டு, வேதத்தில் சொல்லப்பட்ட இந்தப் பூமியில் விழுந்து பிறந்து, பன்றிக்குட்டி புரள்கிறது போல உள்ளது என்று சொல்லும்படித் தவழ்ந்து, ஒளி வீசும் மணிகளை, அணிந்து கொண்டு, நடைகள் மிகவும் பழகி, மனம் போன போக்கின்படிப் பலவகையாகத் திரிந்து, நறுமணம் வீசும் புனுகு வாசனைப் பண்ட வகைகளை உடலில் பூசி, விலைமாதர்களின் வலையில் அகப்பட்டு இறந்து படுவேனோ? ஆதி மூலமே, அடைக்கலம் என்று (கஜேந்திரன் என்னும்) யானை கொண்டாடிக் கூப்பிட, (அதைப் பற்றி நின்ற) முதலையை மடுவில் உடலை நன்றாகப் பிளந்த சக்கரத்தை ஏந்திய திருமால், ஆமை, கயல் மீன் என்றும், வெற்றி கொண்ட பன்றி, வாமனர், விசாலமான கைகள் உடைய நரசிங்கம் என்றும் அவதாரங்கள் எடுத்த திருமால், பாம்பு அணையில் பள்ளி கொண்டவன் ஆகிய திருமாலின் மருகனே, ஜோதி உருவத்துடன் பிழம்பாக, அழகிய திருவண்ணாமலையில் தோன்றி நின்றவனும், நிலவை (சடையில்) அணிந்தவனுமான, கயிலை மலைவாசன் ஆகிய சிவபெருமான் அருளிய குழந்தையே, கலாபம் கொண்ட மயில் போல விளங்கும் உருவத்தினளாகிய குறப் பெண் வள்ளியிடம் பேரன்பு வைத்து, தோள்களை அழுந்த அணைத்து, அவளுடன் சேர்ந்த பெருமாளே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 1272 - பொதுப்பாடல்கள் - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தானதன, தனத்ததந்த, கொண்ட, ஆகிய, என்றும், வீசும், தனிற்கலந்து, பெருமாளே, திருமால்