பாடல் 127 - பழநி - திருப்புகழ்

ராகம் - தந்யாஸி ; தாளம் -
ஆதி
தனன தனதனன தனன தனதனன தனன தனதனன ...... தனதான |
கடலை பொரியவரை பலக னிகழைநுகர் கடின குடவுதர ...... விபா£த கரட தடமுமத நளின சிறுநயன கரிணி முகவரது ...... துணைவோனே வடவ ரையின்முகடு அதிர வொருநொடியில் வலம்வ ருமரகத ...... மயில்வீரா மகப திதருசுதை குறமி னொடிருவரு மருவு சரசவித ...... மணவாளா அடல சுரர்கள்குல முழுது மடியவுய ரமரர் சிறையைவிட ...... எழில்மீறும் அருண கிரணவொளி யொளிரு மயிலைவிடு மரக ரசரவண ...... பவலோலா படல வுடுபதியை யிதழி யணிசடில பசுப திவரநதி ...... அழகான பழநி மலையருள்செய் மழலை மொழிமதலை பழநி மலையில்வரு ...... பெருமாளே. |
கடலை, பொரி, அவரை, பலவிதமான பழங்கள், கரும்பு இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம் போன்ற வயிற்றையும், அதிசயமான மதம் பாய்ந்த அடையாளத்தையும், மும்மதத்தையும்* தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும் கொண்ட யானைமுகத்தோருக்கு இளையவனே, வடமலையாகிய மகாமேருவின் சிகரங்களும் அதிரும்படி, ஒரே நொடியில் உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே, தேவேந்திரனின் திருமகள் தேவயானையுடனும், குறமகள் வள்ளியுடனும், இருவரையும் ஒருங்கே தழுவி இன்ப ஆடல் புரியும் கணவனே, வலிமை பொருந்திய அசுரர்களின் குலம் முழுவதும் அழியுமாறும், உயர்ந்த தேவர்களின் சிறை நீங்கவும், அழகு மிகுந்த சிவந்த கதிரொளியை வீசும் வேலை செலுத்திய ஹரஹர சரவணபவனே, திருவிளையாடல் புரிபவனே, கூட்டமாக உள்ள நக்ஷத்திரங்களின் தலைவனாம் சந்திரனையும் கொன்றைமலரையும் தரித்திருக்கின்ற ஜடாமுடியுடைய பசுபதியாகிய சிவபெருமானும், ஜீவநதியாகிய கங்காதேவியும், அழகிய பழமையான நிர்மலையாகிய உமாதேவியும் பெற்றருளிய மழலைச் சொல் பேசும் குழந்தையே, பழநி மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
* மும்மதங்கள்: இச்சை, கிரியை, ஞானம் என்ற மூன்று சக்திகளையும் மும்மதங்களாகக் கொண்டவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 127 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - பழநி, தனதனன, பெருமாளே, கடலை