பாடல் 126 - பழநி - திருப்புகழ்

ராகம் - ....; தாளம் -
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான |
கடலைச் சிறைவைத் துமலர்ப் பொழிலிற் ப்ரமரத் தையுடற் பொறியிட் டுமடுக் கமலத் தைமலர்த் திவிடத் தையிரப் ...... பவனூணாக் கருதிச் சருவிக் கயலைக் கயமுட் படுவித் துழையைக் கவனத் தடைசிக் கணையைக் கடைவித் துவடுத் தனையுப் ...... பினின்மேவி அடலைச் செயல்சத் தியையக் கினியிற் புகுவித் துயமப் ப்ரபுவைத் துகைவித் தரிகட் கம்விதிர்த் துமுறித் துமதித் ...... தசகோரம் அலறப் பணிரத் நமணிக் குழையைச் சிலுகிட் டுமையிட் டொளிவிட் டுமருட் டுதலுற் றபொறிச் சியர்கட் கடையிற் ...... படுவேனோ சடிலத் தவனிட் டவிசிட் டகுலத் தொருசெட் டியிடத் தினுதித் தருள்வித் தகருத் ரஜன்மப் பெயர்செப் பியிடப் ...... பரிவாலே சநகர்க் குமகஸ்த் யபுலஸ்த் யசநற் குமரர்க் குமநுக் க்ரகமெய்ப் பலகைச் சதுபத் துநவப் புலவர்க் கும்விபத் ...... தியில்ஞான படலத் துறுலக் கணலக் யதமிழ்த் த்ரயமத் திலகப் பொருள்வ்ருத் தியினைப் பழுதற் றுணர்வித் தருள்வித் தகசற் ...... குருநாதா பவளக் கொடிசுற் றியபொற் கமுகிற் றலையிற் குலையிற் பலமுத் துதிர்செய்ப் பழநிப் பதிவெற் பினில்நிற் குமரப் ...... பெருமாளே. |
சமுத்திரத்தை ஒரு எல்லையைத் தாண்டாதபடி சிறையில் வைத்து, மலர்ச் சோலையில உள்ள வண்டை உடலில் வரி ரேகைகளை அமைத்து ஒடுக்கி, மடுவில் உள்ள தாமரை மலரை வாடச் செய்து, ஆலகால விஷத்தை பலி ஏந்தி இரப்பவனாகிய சிவ பெருமானுக்கு உணவாகக் கருதிவைத்து, போராடும் கயல் மீனை குளத்தில் புக வைத்து, மானை காட்டில் அடையச் செய்து, பாணத்தை உலையில் கடைய வைத்து, மாவடுவை உப்பினில் ஊறவைத்து, வெற்றிச் செயல் கொண்ட வேற்படையை தீயினில் புக வைத்து, யமனை உதைத்திட்டு, ஒளி பொருந்திய வாளை ஆட்டமுற்று முறிய வைத்து, மதிக்கப்படும் சகோரப் பட்சியை (வெட்கத்தால்) அலறும்படிச் செய்து, ரத்தினத்தால் செய்யப்பட்ட மணிக்குழையோடு போராடுவதும், மயக்கும் மை அணிந்ததும், ஒளி வீசுவதும், மருட்டுதல் செய்யும் மனத்தை உடைய விலைமாதர்களின் கடைக்கண்களில் அகப்படுவேனோ? சடை மகுடத்தவனாகிய சிவபெருமானின் ஆணையின்படி மேன்மையான குலத்தில் ஒரு செட்டி இடத்தே தோன்றி, அருளும் ஞானமும் கொண்ட ருத்ர ஜன்மன்* என்னும் பெயருடன் திகழ்ந்து, அன்புடனே சநகர், அகஸ்தியர், புலஸ்தியர், சநற்குமரர் ஆகியோர்களுக்கு அருள் பாலித்தவனே, சங்கப்பலகையில் வீற்றிருந்த நாற்பத்தொன்பது புலவர்களுக்கும் வேறுபாடு இல்லாத முறையில் ஞானப் பகுதியில் உள்ள இலக்கண இலக்கிய முத்தமிழில் (சிவபெருமான் இயற்றிய) அகப்பொருள் விளக்கத்தை குற்றமின்றி உணர்வித்து அருளிய வித்தகனே, சற்குரு நாதனே, பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின் உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே.
முதல் 12 வரிகளில் கண்ணுக்கு உவமையாகக் கருதப்படும் கடல், வண்டு, தாமரை, விஷம், கயல் மீன், மாவடு, வேல், மான், யமன், வாள், சகோரப் பட்சி ஆகியவை எங்ஙனம் கண்ணுக்கு உவமை ஆகா என்பதை ஒவ்வோர் உவமைக்கும் ஒரு குறை உள்ளது என்று கூறப்படும் முறை தனிச் சிறப்பு வாய்ந்தது.
* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர். - திருவிளையாடல் புராணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 126 - பழநி - திருப்புகழ், Thiruppugazh, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - தனனத், வைத்து, உள்ள, செய்து, சகோரப், கண்ணுக்கு, செட்டி, குலத்தில், கொண்ட, தாமரை, தருள்வித், பவளக், பழநிப், பெருமாளே, கயல்